Last Updated:
குட்டையின் மேலே கோழியை வளர்த்தால் கோழியின் எச்சம் மீனுக்கு கிடைத்துவிடும் என்ற நோக்கத்தில் வளர்த்து வருகிறேன். இந்த கோழியின் கழிவுகள் மீனுக்கு உணவாகிறது. மீன் தண்ணீர் வயலுக்கு பாய்ச்சப்படுகிறது.
தற்போது உள்ள காலகட்டத்தில் விவசாயத்தில் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள பணகாட்டாங்குடியில் வீரசாமி என்ற இயற்கை விவசாயி குடும்ப உறுப்பினர்களை மட்டும் கொண்டு 15 வகையான பண்ணை அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இவர் உற்பத்தி செய்யும் பொருட்களை வியாபாரிகளுக்கு விற்காமல் நுகர்வோருக்கு கொடுத்து வருகிறார். மீன் குட்டையின் மேல் கோழி கூடாரம் அமைத்து அதன் கழிவுகளை மீனுக்கு உணவாகவும் கொடுத்து வருகின்றார்.
இது குறித்து அவர் கூறுகையில் நம் பண்ணையில் நாட்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், தேனீ, 5 குட்டைகள் அமைத்து 15 வகையான மீன்களை வளர்த்து வருகிறேன். இந்த வருடம் பத்து வகையான நெல் சாகுபடி செய்து இருக்கின்றேன். கருப்பு அரிசி, வெள்ளை அரிசி, சிகப்பு அரிசி என மூன்று வகை சாகுபடி செய்து உள்ளேன்.
இந்த பண்ணையின் முக்கிய அம்சம் என்னவென்றால் செல்ப் ஹெல்ப் என என்னுடைய குடும்ப உறுப்பினர்களை வைத்தே இந்த பண்ணையை செயல்படுத்தி வருகிறேன். என்னை தேடி வருபவர்களுக்கும் இயற்கை விவசாயத்தை பற்றி கற்றுத் தருகிறேன்.
இதன் விலைப்பொருட்களை வியாபாரிகளுக்கு விற்பதில்லை, நுகர்வோருக்கு மட்டும் தான் கொடுக்கின்றேன். நான் குறிக்கோள் வைத்து வேலை செய்யவில்லை. லாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் பார்த்துக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கின்றது. 2004 முதல் இந்த 7 ஏக்கரில் முழுக்க முழுக்க எல்லாவற்றையும் இயற்கை விவசாயமாக செய்து வருகிறேன்.
இந்த பண்ணையை 42 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கினேன். இங்கு கால்வாய் நீர் பாசனத்தை தான் பயன்படுத்துகிறேன். இதனை பராமரிப்பு என்பது நான் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதுவே தானாக எல்லாம் வளர்ந்து கொள்கிறது. பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது. இயற்கையோடு ஒன்றி வளர்த்தால் பூச்சி தாக்குதல் இருக்காது.
கரும் பசுமை எந்த பயிரில் வருகிறதோ அதில் தான் பூச்சி தாக்குதல் இருக்கும். இயற்கை விவசாயத்தை பொறுத்தவரை கரும் பசுமை என்பது இருக்காது. இளம்பச்சையாகத்தான் இருக்கும். அதனை விரும்பி பூச்சிகள் வராது. நான் பஞ்சகவ்யா அடிக்கும் போது பூச்சி விரட்டியையும் சேர்த்து அடித்துவிடுவேன்.
அதே போல் மீன் குட்டையையும் பெரிதாக பராமரிப்பதில்லை. 2003 இல் மீன்குட்டையை வெட்டினேன். இந்த குட்டையின் மேலே கோழியை வளர்த்தால் கோழியின் எச்சம் மீனுக்கு கிடைத்துவிடும் என்ற நோக்கத்தில் வளர்த்து வருகிறேன். இந்த கோழியின் கழிவுகள் மீனுக்கு உணவாகிறது. மீன் தண்ணீர் வயலுக்கு பாய்ச்சப்படுகிறது.
மீனுக்கு தீவனம் என்பது அடிக்கடி போடுவது கிடையாது. அதுவாகத்தான் வளர்கிறது. இதுவரைக்கும் நம்முடைய குளத்தில் மீன்கள் நோய் வந்து இறந்ததில்லை. அதற்கு காரணம் நான் அதிகப்படியான உணவு கொடுப்பதில்லை. அதனால்தான் இறப்பு நிலை என்பதே கிடையாது.
குளத்தை சுற்றி உள்ள மரச் செடி கொடிகள் குளத்தில் விழுந்து தாவர உற்பத்தி தானாக உருவாகிறது. தண்ணீர் மட்டும் மாற்றிக்கொண்டே இருந்தால் போதுமானது. இரண்டு பெண்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். மற்றபடி என்னுடைய பேரன், மனைவி என குடும்ப உறுப்பினர்களை வைத்துத்தான் இதனை செய்து வருகிறேன்.” என தெரிவித்தார்.
Mayiladuthurai,Nagapattinam,Tamil Nadu

