Last Updated:
கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக, வெளிநாட்டு சதி எதுவும் நடைபெறாமல், நாடாளுமன்றம் கூடுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
2047-ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான திட்டங்களுடன் பட்ஜெட் இருக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை, கடவுள் லட்சுமி தொடர்ந்து ஆசிர்வதிக்கட்டும் எனக் கூறினார். தனது 3 ஆவது ஆட்சிக் காலத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2047 ஆம் ஆண்டில், வளர்ந்த பாரதம் என்ற இலக்கை இந்தியா முழுமையாக அடையும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவின் அனைத்து வகையான வளர்ச்சிகளிலும் தனது 3 ஆவது ஆட்சிக் காலத்தில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். மேலும் புத்தாக்கம், ஒருங்கிணைந்த வளர்ச்சி, முதலீடு ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையானவை என்று கூறிய பிரதமர், அதை நோக்கி அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக, வெளிநாட்டு சதி எதுவும் நடைபெறாமல், நாடாளுமன்றம் கூடுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
January 31, 2025 1:50 PM IST


