சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்ப்பதாக ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் கூறியதாவது:
“ரோஹித்தும், கோலியும் தரமான வீரர்கள். அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள். ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டில் தொடக்க வீரராக ரோஹித் என்ன செய்வார் என்பதை அனைவரும் அறிவோம். கோலி, ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட்டில் தலைசிறந்தவர். அவர்கள் இருவரையும் ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்திய அணி மிஸ் செய்யும். ஆனால், அது 2027-க்கு முன் நடக்க வாய்ப்பு இல்லை என எதிர்பார்க்கிறேன். அவர்கள் இருவரும் விளையாடுவது நிச்சயம் அணிக்கு உதவும்” என அவர் தெரிவித்தார்.
கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சதம் விளாசி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வெல்ல டிராவிஸ் ஹெட் உதவினார். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றார்.
டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகின்றனர். கடைசியாக இருவரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி இருந்தனர்.