Last Updated:
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1, 2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்குத் தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழகம், இந்தியாவின் நெசவுத் தலைநகரமாகத் திகழ்கிறது. கோயம்புத்தூர், திருப்பூரை மையமாகக் கொண்ட பவர்லூம் (விசைத்தறி), திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள், ஈரோடு மற்றும் சேலம் கைத்தறி ஆகியவை உலகப்புகழ் பெற்றவை. இந்தியாவின் மொத்த கைத்தறி உற்பத்தியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள தமிழகம், பட்டு மற்றும் பருத்தி உடைகளின் உற்பத்தியில் முன்னோடியாகவும், சிறந்த பாரம்பரிய நெசவு நுட்பங்களுக்கும் பெயர் பெற்றது. இவ்வாறு சிறப்புமிக்க நெசவுத் தொழில் தற்போது, நலிவடைந்து காணப்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு பல்லாயிர குடும்பங்கள் இருக்கின்றன.
மத்திய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஜவுளி தொழிலைப் பாதுகாக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் சில கோரிக்கைகளை எதிர்பார்த்து உள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க மாநிலத்தலைவர் சுரேஷ் தெரிவித்ததாவது; “விவசாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள நெசவுத்தொழில் கொரோனா காலத்திற்குப் பிறகு அழிவை நோக்கி செல்வதாக தெரிவித்தார். தமிழக அரசு 3 ஆயிரம் விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்காக ஒரு லட்சம் ரூபாய் மானியம் தருவதாக அறிவித்துள்ளதை போல் மத்திய அரசும் விசைத்தறிகளை மேம்படுத்துவதற்கு மானியம் வழங்க வேண்டும் எனவும், சூரிய மின் உற்பத்தி அமைப்பதற்கு 50 சதவீதம் மானியமும், மற்ற 50 சதவீதத்தை குறைந்த வட்டியில் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்த நெகிழிப்பையை ஒழிப்பதற்காக துணிப்பைகளை விசைத்தறி மூலம் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க வேண்டும் என்றும் இதனால் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றனர். மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவது போல் விசைத்தறி நெசவாளர்களுக்கும் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு நிறுத்தப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றார்.
இதே போல் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி தெரிவித்ததாவது, “அமெரிக்கா இந்திய ஜவுளிப்பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பு மிகப்பெரிய பேரிடியாகவும், இதனால் ஜவுளி உற்பத்தி குறைந்து, ஜவுளி ஏற்றுமதி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வாக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடும் என்பதை பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும், தமிழக அரசு அறிவித்த டெக்ஸ்டைல்ஸ் பூங்காவிற்கு மிகுந்த வரவேற்பு உள்ளதை போல் மத்திய அரசும் ஜவுளி பிராசஸிங் மையத்தை உருவாக்க நிதி ஒதுக்க வேண்டும். இதன் மூலம் டையிங், பிளீச்சிங், பிராசஸ்சிங் மற்றும் பொது சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றுடன் அமைப்பதால் மேம்படுத்தப்பட்ட ஜவுளி உற்பத்தி செய்ய முடியும் என்றார். மேலும் சூரிய மின்சக்தி, காற்றாலை மின் உற்பத்தியில் 24 மணி நேர சேமிப்பை வைப்பதற்கான தேசிய அளவில் விதிகளை உருவாக்க வேண்டும் என்றார். மேலும் ஜவுளி தொழிலில் இந்தியா முதன்மை நாடாக முன்னரே மெகா கிளஸ்டரை மற்ற நாடுகளில் அமைக்க இந்திய அரசு உதவ வேண்டும். அதன் மூலம் 0 வரியில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்பதால் மத்திய அரசு வருகிற பட்ஜெட்டில் அறிவிக்க முன்வர வேண்டும் என்றார்.
Salem,Salem,Tamil Nadu
Feb 01, 2026 12:33 PM IST
2026 மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் நெசவுத் தொழிலாளர்கள்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா

