Last Updated:
தங்கத்தின் விலை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்று உச்சத்தை எட்டி வருகிறது.
தங்கத்தின் விலை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்று உச்சத்தை எட்டி வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழல் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் தொடர் மாற்றங்கள் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
இதுமட்டுமின்றி உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது தங்க இருப்பை அதிகரிக்க காட்டும் அதீத ஆர்வத்தினால், சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தஞ்சை மாவட்ட நகை கடை சங்கத் தலைவரும் நகை வியாபாரியுமான வாசுதேவன் இது குறித்து கூறுகையில்” ஒரு சிறிய நகைக்கடை நடத்துவதற்கு கூட குறைந்தது இரண்டு கிலோ தங்கம் கையிருப்பில் இருக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் 40 லட்சம் ரூபாய்க்கு கிடைத்த ஒரு கிலோ தங்கம் தற்போது ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயைத் தாண்டிவிட்டது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சிறு நகை வியாபாரிகள் தங்கத்தை கொள்முதல் செய்வதிலும் விற்பனையிலும் கடுமையான சவால்களை சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல விலை உயர்ந்தாலும் மாத வருமானம் பெறுபவர்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மற்றொரு புறம் கொரோனா காலத்திற்கு பிறகு முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குச்சந்தை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என கூறுகிறார், சானக்கியா ட்ரேட் மார்க்கெட் பொருளாதார நிபுணர் பிரகாஷ். பிசிக்கல் தங்கமாக வாங்குவதை விட இ.டி.எஃப் (ETF) எனப்படும் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்குவது முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார். தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்களை ஆய்வு செய்யும் பொருளாதார வல்லுநர்கள் வரும் 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைத் தாண்டக்கூடும் என எச்சரிப்பதாக பிரகாஷ் தெரிவித்தார்.
Apr 08, 2026 11:06 AM IST

