Last Updated:
2019ல் இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா கொல்லப்பட்டுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா நடத்திய பதான்கோட் தாக்குதலின்போது, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை சிறைபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நாட்டின், கைபர் பக்துன்க்வாவின் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில், பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் அந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பயங்கரவாத அமைப்புக்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்தச் சண்டையில், மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா கொல்லப்பட்டுள்ளார்.
இவருடன் சேர்ந்து, 14 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெஹ்ரீக்-இ-தலிபான் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் பயனர்களின் சில சமூக வலைதளங்களில், மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா உட்பட 6 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக, அந்நாட்டு ஆங்கில செய்தி நிறுவனமான டான், மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா, லான்ஸ் நாய்க் ஜிப்ரன் உல்லாஹ் ஆகியோர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து தரவுகளுமே மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா, பயங்கரவாதிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது.
2019ஆம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில், 40 பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து பதான்கோட் தாக்குதலை நடத்தியது.
இந்தப் பதில் தாக்குதலின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்ற மிக்-21 ரக போர் விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானின் மிக்-21 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு விழுத்தி, அவரைக் கைது செய்தது. இதில், மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
June 26, 2025 2:51 PM IST


