பூமியை தாண்டி, நமது சூரிய குடும்பத்தை தாண்டி விண்வெளியில் ஆயிரக்கணக்கான கிரகங்களும், சிறு கோள்களும் இருக்கின்றன. அத்துடன் பல லட்சம் விண்கற்களும் சுற்றி வருகின்றன. இந்நிலையில், 2011 MW1 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருகிறது. அது மணிக்கு 28,946 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், இதன் அளவு சுமார் 380 அடி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 25ஆம் தேதி பூமியில் இருந்து சுமார் 2.4 மில்லியன் மைல்கள் அளவில் இருக்கும் இந்த சிறுகோள், பூமியின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கும் என்றும், ஆனால், மிகவும் நெருக்கமாக வராது என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மிகப்பெரிய கட்டிடம் அளவிலான இந்த சிறுகோள் ஆபத்தானதாக இருந்தாலும், பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளது.
இருப்பினும் இந்த சிறுகோளின் பாதை மற்றும் இயக்கம் ஆகியவற்றை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக நாசா கூறியுள்ளது. நமது சூரிய குடும்பம் உருவானதில் இருந்து எஞ்சியிருக்கும் சிறுகோள்கள், பூமி உள்ளிட்ட பல கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறான சிறுகோள்கள் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையே நிறைய இருக்கின்றன. ஒரு சில சிறுகோள் மற்ற கிரகங்களின் மீது திடீரென மோதி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், தற்போது பூமியை நெருங்கி வரும் 2011 MW1 பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், அதன் பாதையை நாசா கண்காணித்து வருகிறது.
.
- First Published :
