ஆபத்தான முறையில் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் இந்திய ஊழியர் மீது நேற்று ஜூன் 24 ஆம் தேதி காலை குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட ராகுல் சிங், 22 வயதான ராஜ்தீப் என்ற மற்றொரு ஊழியரை கத்தியை வைத்து காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஜூன் 23 ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில், அங் மோ கியோ அவென்யூ 8 குடியிருப்பில் உள்ள புளாக் 513 இல் நடந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜ்தீப்பின் இடது கையில் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இன்னொருவரை நோக்கி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தற்போது சிங் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார், மீண்டும் ஜூலை 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
என்ன நடந்தது?
பொது குடியிருப்பு புளோக்கில் உள்ள மூன்று அறைகள் கொண்ட வீட்டில் இந்த தாக்குதல் நடந்ததாக ஷின் மின் செய்தியிடம் பேசிய ராஜ்தீப் பகிர்ந்து கொண்டார்.
ஏஜென்ட் மூலம் ஏழு மாதங்களுக்கு முன்பு அவர் அந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தார், மேலும் இந்தியாவிலிருந்து வந்த மற்ற மூன்று வெளிநாட்டு ஊழியர்களுடன் அவர் ஓர் அறையை பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு மாதமும், அங்கு தங்கி இருப்பவர்களிடம் சிங் வாடகை வசூல் செய்து, பின்னர் தொகையை வீட்டு உரிமையாளருக்கு மாற்றுவார். அவருக்கும் அவரது அறை தோழர்களுக்கும் மாத வாடகை S$450 என்றும் அவர் சொன்னார்.
யுனைடெட் ஸ்கொயர் மால் வெளியே இறந்து கிடந்த 21 வயது இளைஞர்
20 வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரே வீடு
அந்த வீட்டில் வசித்த அனைவரும் முதலில் எந்த பிரச்சனையும் இன்றி அமைதியாக வாழ்ந்ததாக ராஜ்தீப் கூறினார்.
அவ்வாறு போய்க்கொண்டு இருக்கையில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, சிங் அந்த வீட்டை வெளி ஆட்களுக்கும் உள் வாடகைக்கு விடத் தொடங்கினார்.
அதாவது வீட்டில் 20 வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டதாகவும், இதனால் வீட்டில் நெரிசல் ஏற்பட்டு தங்குவதற்கு சிரமமாகவும் இருந்தது என்று ராஜ்தீப் கூறினார்.
HDB கழக கூற்றுப்படி, மூன்று அறைகள் கொண்ட ஓர் HDB பிளாட்டில் அதிகபட்சம் ஆறு வாடகைதாரர்கள் மட்டுமே தங்க வேண்டும்.
ராஜ்தீப்புக்கு தங்க முடியாத நிலை ஏற்பட்டது
அந்த வீட்டில் 2 பெட் வசதி படுக்கையறைகள் மட்டுமே இருந்ததால், தானும் தனது இரண்டு அறைத் தோழர்களும் ஒரு படுக்கையறையைப் பகிர்ந்து கொண்டதாக ராஜ்தீப் கூறினார்.
சிங்கும் மற்ற 16 பேரும் லிவிங் அறையிலும் இன்னொரு படுக்கையறையிலும் தூங்குவார்கள்.
பின்னர், கூடுதல் நபர்களை அங்கு தங்க வைப்பதற்காக சிங் படுக்கை (bed) வசதியை லிவிங் அறைக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது, இதனால் ராஜ்தீப்பும் அவரது அறைத் தோழர்களும் தரையில் தூங்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஆட்சேபனைகளை சிங் நிராகரித்தார்
ஆள்கள் அதிகமானதால் இரவில் சத்தம் தவிர்க்க முடியாத ஒன்றானது, இதனால் அங்கு வசிப்பவர்களின் ஓய்வு சீர்குலைந்ததாக ராஜ்தீப் ஷின் மினிடம் கூறினார்.
கூடுதலாக, அனைவருக்கும் ஒரே சமையலறை மற்றும் கழிப்பறை என்பதால், அந்த இடமெல்லாம் மிகவும் அசுத்தமானதாக ராஜ்தீப் சொன்னார்.
“நாங்கள் பலமுறை எங்களின் ஆட்சேபனைகளைத் சிங்கிடம் தெரிவித்தோம், ஆனால் அவர் எங்களை வீட்டை விட்டு வெளியேற சொன்னார். அவரை (சிங்) நாங்கள் எதுவும் செய்ய முடியாது,” என்றும் அவர் கூறினார்.
இதுபோன்று உள்வாடகைக்கு விடுவது சட்டவிரோதமானது என்று ராஜ்தீப் சிங்கை எச்சரித்ததாகவும், ஆனால் சிங் அதை காதில் வாங்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
“எனது புரிதலின் அடிப்படையில், மற்ற வெளிநாட்டு ஊழியர்களின் வாடகை தலா S$300 இருக்கும். மொத்தம் 20 பேருக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது S$6,000 வசூலிக்க முடியும், ஆனால் வீட்டின் வாடகை S$3,000 மட்டுமே. மீதமுள்ள பணம் சிங் கை செலவுக்கு செல்கிறது என்று நான் ஊகித்தேன்,” என்று ராஜ்தீப் மேலும் கூறினார்.
தகராறும் தாக்குதலும்
ஜூன் 23 அன்று, வீட்டை உள் வாடகைக்கு விடுவது தொடர்பாக சிங்குடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலில் முடிந்ததாக ராஜ்தீப் தெரிவித்தார்.
அப்போது, சிங் கத்தியை எடுத்து ராஜ்தீப்பின் அறைத் தோழரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம் தொடர்கையில் மீண்டும் அவர் கத்தியை சுழற்றினார், அப்போது தன் நண்பரை பாதுகாக்க ராஜ்தீப் கையை நீட்டினார், இதனால் அவரின் கையில் காயம் ஏற்பட்டதாக ராஜ்தீப் கூறினார்.
அதிர்ச்சியடைந்த சிங், கத்தியை வீசிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டதாக அவர் கூறினார்.
கைது
அதன் பின்னர், நடந்தது குறித்து ராஜ்தீப் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் சிங்கை கைது செய்தனர்.
ராஜ்தீப், செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது இடது கையில் ஏற்பட்ட காயத்திற்கு ஏழு தையல்கள் போடப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
ராஜ்தீப், ஹோட்டலில் வெயிட்டராக வேலை செய்வதாகவும். காயம் பெரிதாக இல்லாவிட்டாலும், அவரின் நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கியதாகவும் அவர் சொன்னார்.
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Photo Credit: Shin Min Daily News

