Last Updated:
அமெரிக்கா மற்றும் கனடாவில் கடும் பனிப்புயல் தாக்கம், 20 மாகாணங்களில் அவசர நிலை, 18 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை அச்சுறுத்திவரும் பனிப்புயலால் சுமார் 18 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளுக்கான விமான சேவை முடங்கியுள்ளது.
அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவாக தெற்கு ராக்கி மலைத்தொடர் தொடங்கி நியூ இங்கிலாந்து வரை கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அமெரிக்காவின் வடக்கு, வடகிழக்கு பகுதிகளில் பனிப்புயலில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வாசிங்டன் டி.சி. உட்பட 20 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க் முழுவதும் பனிப்புயல் வீசி வருகிறது. சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பனிக்கட்டியில் புதைந்தன. பனிப்புயல் தாக்கத்தால் நியூயார்க்கில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. சாலைகளை சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஓக்லஹோமா மாகாணத்தின் பல பகுதிகள் வெண்பனியால் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஊழியர்கள் சாலைகளை சீரமைத்து வருகின்றனர். நியூ ஜெர்சி மாகாணத்தை பனிப்புயல் புரட்டிப்போட்ட நிலையில், மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதேபோல, வடகிழக்கு மாகாணங்களில் பல்வேறு நகரங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மைனே மாகாணத்தில் தனியார் ஜெட் விமானம் ஒன்று, மோசமான வானிலை காரணமாக விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் உயிரிழந்தனர். பனிப்புயல் தென்கிழக்கு கனடா நோக்கி நகர்ந்த நிலையில், டொராண்டோ நகரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கியூபெக் புறநகர் பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டது. விமானம் மற்றும் சாலை போக்குவரத்தும் முடங்கியது.


