2 லட்சம் வேலைவாய்ப்புகள் முதல் மலிவு விலை AI வரை..!! ரிலையன்ஸின் பிரம்மாண்ட திட்டங்களை வெளியிட்ட அம்பானி..!!
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49ஆவது வருடாந்திர பொதுக் கூட்டம் நடந்தது. இந்தியாவே உற்றுநோக்கிய இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி அடுத்து வரும் நாட்களில் ரிலையன்ஸ் குழுமம் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த போகிறது என்ற விவரங்களை வெளியிட்டார்.
முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய அறிவிப்பு ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் (Jio Platforms) நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான ஐபிஓ வெளியீடு தான். அந்த வகையில் விரைவில் சாதாரண மக்களும் ஜியோ நிறுவனத்தில் முதலீட்டாளர் ஆக முடியும். ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் (Reliance Intelligence ) என்ற பெயரில் குஜராத்தின் ஜாம்நகரில் இந்தியாவின் சொந்த ஏஐ உள்கட்டமைப்பை ரிலையன்ஸ் உருவாக்கி வருகிறது என அம்பானி அப்போது அறிவித்தார். இந்தியாவில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான செலவைக் கணிசமாகக் குறைப்பதே தங்களின் நோக்கம் என அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி அப்போது உறுதி அளித்தார். அந்த வகையில் ஏஐ பிரிவில் பல்வேறு தயாரிப்புகளை ரிலையன்ஸ் வெளியிட இருக்கிறது.

ஜியோபாரத் ஐக்யூ (JioBharatIQ), ஏஐ வியாபார் (AI Vyapar) போன்ற சேவைகள் மூலம் 22 இந்திய மொழிகளில் ஏஐ வசதி சாமானிய மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படவுள்ளது. உலகத்தரம் வாய்ந்த அதிநவீன என்விடியா பிராசஸர்களைப் பயன்படுத்தி உலகிலேயே மிகப்பெரிய ஏஐ உள்கட்டமைப்புகளில் ஒன்றாக ஜாம்நகர் ஏஐ மையம் மாற்றப்படும்.
இந்தியாவின் எல்லைப் பகுதிகள், தீவுகள் மற்றும் தொலைதூர கிராமங்களுக்கும் இணைய வசதியைக் கொண்டு சேர்க்க ஜியோ சொந்தமாகச் செயற்கைக்கோள் நெட்வொர்க்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் ஜியோவின் அனைத்து வாடிக்கையாளர்களையும் 5G நெட்வொர்க்கிற்கு மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜியோவின் பயனர் எண்ணிக்கை 52.4 கோடியைத் தாண்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி உரையாற்றிய போது குஜராத்தின் ஜாம்நகர் மற்றும் கட்ச் (Kutch) பகுதிகளில் உருவாக்கப்பட்டு வரும் பசுமை ஆற்றல் திட்டங்கள் மூலம் 2,00,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். 2026-ஆம் நிதியாண்டின் EBITDA-வில் சில்லறை வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் வணிகங்கள் ஏறக்குறைய பாதியை பங்களித்துள்ளன. இவை இரண்டும் இணைந்து ரிலையன்ஸின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய உந்துசக்திகளாகத் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன என அம்பானி தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி 50 பெருநிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த முதலீட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கை பங்களித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் 2026-ஆம் நிதியாண்டில் வருவாய், EBITDA மற்றும் நிகர லாபம் ஆகியவற்றில் சாதனை அளவிலான உயர்வை பதிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமம் நாட்டின் கருவூலத்திற்கு ரூ. 2,16,472 கோடியை பங்களித்து, மிகப்பெரிய பங்களிப்பாளராக திகழ்ந்துள்ளது. 2026-ஆம் நிதியாண்டிற்கான ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலதனச் செலவு (capex) ரூ. 1,44,271 கோடியாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அதன் மொத்த மூலதனச் செலவு ரூ. 6,48,428 கோடியாக இருந்தது; இது இந்தியாவில் உள்ள எந்தவொரு நிறுவனத்தையும் விட அதிகமானதாகும். இதனால் ரிலையன்ஸின் எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பு நாட்டின் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

