Last Updated:
ஹைதராபாத் அருகே தேஜா என்ற பெண் தனது இரண்டு மகன்களை கொன்று, ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தெலங்கானா மாநிலத்தில் தனது இரண்டு குழந்தைகளைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு, தாய் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகரான கஜுலராமரம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 35 வயதான தேஜா என்ற பெண், அவரது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. தனக்கும், தனது குழந்தைகளுக்கும் கண் தொடர்பான பிரச்சினை இருப்பதால் அதை சொல்லிக் காட்டி அடிக்கடி கணவர் சண்டையிட்டதாகத் தெரிகிறது. மேலும் கடன் பிரச்சினையும் குடும்பத்தில் இருந்து வந்ததால் தேஜா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், மிகுந்த மன இறுக்கத்தில் தவித்து வந்த தேஜா வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தனது மூத்த மகனான அர்ஷித் ரெட்டி மற்றும் இளைய மகனான ஆஷிஷ் ரெட்டி ஆகியோரை இளநீர் வெட்ட பயன்படுத்தும் கொடூர வாளால் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாலை 4 மணியளவில் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீடிமெட்லா போலீசார் உயிரிழந்து கிடந்த தேஜா மற்றும் அவரது மூத்த மகன் அர்ஷித் ரெட்டியும் ஆகியோரின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைய மகன் ஆஷிஷ் ரெட்டி உயிருடன் இருந்த நிலையில், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை, கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஆகியவற்றின் காரணமாக தேஜா இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரியவந்துள்ளது. மேலும் தேஜாவுக்கு இருந்த உளவியல் ரீதியிலான பிரச்சினையும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் ஒரு தாய் எப்படி தன்னையும் தன் குழந்தைகளையும் கொல்லும் நிலைக்கு வந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தாய் தனது இரு மகன்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
April 19, 2025 2:32 PM IST


