Business
oi-Velmurugan P
டோக்கியோ: சர்வதேச நாணயச் சந்தையில் வரலாற்றில் இல்லாத மாற்றம் நடந்துள்ளது. ஜப்பான் நாட்டின் நாணயமான ‘யென்’ மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாதாளத்திற்கு போய்விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இதன் மதிப்பு 163.24 என்ற புள்ளியைத் தொட்டு, சுமார் 40 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த நிலையை அடைந்துள்ளது. 1986-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜப்பானிய நாணயத்தின் மதிப்பு இந்த அளவிற்குச் சரிவது இதுவே முதல்முறை. உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததும், அமெரிக்க அரசின் பத்திர ஈட்டல்கள் வீறுகொண்டு எழுந்ததும் இந்த மாபெரும் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
வளைகுடா நாடுகளில் நிலவரம் நிச்சயமற்ற சூழல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்க டாலருக்கான தேவை திடீரெனப் பெருமளவில் அதிகரித்துள்ளது. மற்றொருபுறம், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 91.99 டாலரை எட்டியிருக்கிறது.இதனால் அமெரிக்காவின் நீண்டகாலப் பத்திர ஈட்டல்கள் 5 சதவீதத்தைக் கடந்ததால் உலகச் சந்தைகளே ஆடிப்போயிருக்கினற்ன. . இதனால் யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் ஆஸ்திரேலிய டாலர் போன்ற அனைத்து முக்கிய நாணயங்களும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. ஆனால் மற்ற உலக நாடுகளின் நாணய மதிப்பைவிட மோசமாக பாதிக்கப்பட்டது ஜப்பானிய ‘யென்’ தான்.

முன்னதாக, டாலருக்கு எதிரான யென் மதிப்பு 160-ஐக் கடந்தபோது.. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்.. ஜப்பான் அரசு தனது வரலாற்று சாதனையாக மிகப்பெரிய அளவிலான அந்நியச் செலாவணி கையிருப்பைச் செலவழித்துச் சந்தையை மீட்டது. இருப்பினும், அந்த நிவாரணம் தற்காலிகமாகவே இருந்தது. நாணயத்தின் மதிப்பு மீண்டும் 163-ஐக் கடந்துள்ள நிலையில், ஜப்பான் நிதி அமைச்சகம் மீண்டும் சந்தையில் நேரடியாகக் களமிறங்கித் தனது சொந்த நாணயத்தை வாங்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன. நாணயத்தின் இந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த ஜப்பான் மீண்டும் பல்லாயிரம் கோடி டாலர்களைச் செலவிட்டு, எதிர்பாராத விதமாகச் சந்தையில் நுழையக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள்..
ஏனெனில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையும், உயர்ந்து வரும் அமெரிக்க அரசின் பத்திர ஈட்டல்களும் டாலரை வலுப்படுத்தி வருகிறது. ஜப்பானிய ‘யென்’ நாணயம் இன்று 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குத் தன் மிகக் குறைந்த நிலையை எட்டியிருக்கிறது. .
30 ஆண்டுகால பத்திர ஈட்டல்: 2 மாதங்களில் இல்லாத உயர்வாக 5.15 சதவீதத்தை எட்டியிருக்கிறது.
10 ஆண்டுகால முதன்மைப் பத்திர ஈட்டல்: கடந்த மே மாதத்திற்குப் பிறகு தன் உச்ச அளவாக 4.64 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது.
உயர்ந்து வரும் அமெரிக்கப் பத்திர ஈட்டல்கள், டாலர் சார்ந்த முதலீடுகளை முதலீட்டாளர்களுக்குக் கவர்ச்சிகரமானதாக மாற்றி உள்ளதால்,யென் நாணயம் தொடர் ந்து பலவீனம் அடைந்து வருகிறது. இந்த சூழலில் ஜ அரசு ஓய்வூதிய நிதியத்தின் சில வெளிநாட்டு முதலீடுகளை உள்நாட்டுச் சொத்துக்களை நோக்கி மாற்றலாம் என்று ஜப்பான் நிதி அமைச்சர் கூறிய கருத்துக்களால் யென் நாணயத்திற்கு கிடைத்த தற்காலிக ஆதரவும் தற்போது மறைந்துவிட்டது. எனவே, ஜப்பான் அதிகாரிகள் மீண்டும் நேரடியாகச் சந்தையில் இறங்கி ‘யென்’ நாணயங்களை வாங்குவார்களா என்பதில் கவனம் திரும்பி இருக்கிறது.
பொருளாதார வல்லுநர்களின் கருத்து என்ன
ஹெச்எஸ்பிசி வங்கியின் பகுப்பாய்வாளர்கள், ஜப்பான் விரைவில் மீண்டும் சந்தையில் தலையிடக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், பேங்க் ஆஃப் ஜப்பான் வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தினாலோ, அல்லது அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டிக்குறைப்புப் பாதைக்குத் திரும்பினாலோ ஒழிய, வெறும் அரசாங்கத் தலையீட்டால் மட்டுமே நீண்டகாலத் தீர்வை ஏற்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்கள். அவர்களின் கணிப்புப்படி, டாலர் – யென் பரிமாற்ற விகிதம் 160-165 என்ற உயர் வரம்பிலேயே நீடிக்கும். அவ்வப்போது அரசு செய்யும் தலையீடுகள் மேலும் சரிவடைவதைக் கட்டுப்படுத்தினாலும், ஜப்பானில் நிலவும் எதிர்மறை உண்மையான வட்டி விகிதங்கள் டாலருக்கே தொடர்ந்து ஆதரவாக இருக்கும்.
ஜப்பான் அதிகாரிகளுக்கு சவால்
ஜப்பானிய நிதி கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்த யென் வீழ்ச்சி மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருககிறது. அமெரிக்க-ஈரான் மோதலால் எண்ணெய் விலை உயர்ந்து வரும் நேரத்தில், பலவீனமான நாணயம் இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தி உள்ளது. இது பணவீக்க அழுத்தத்தை அதிகரித்து, யென் நாணயத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கும் ‘பேங்க் ஆஃப் ஜப்பான்’ வங்கிக்கும் அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளது ஆனால், அவசரப்பட்டு வட்டி விகிதங்களை உயர்த்தினால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, பொருளாதாரத்தைப் பாதிக்காமல், இறக்குமதி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ‘பேங்க் ஆஃப் ஜப்பான்’ ஒரு மிக நுட்பமான சமநிலையைப் பேண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.



