Last Updated:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ், அசாருதீன், கங்குலி ,தோனி, விராட், ரோஹித் எனும் வெற்றிக்கேப்டன்கள் வரிசையில் புதிய கேப்டனாக அவதாரம் எடுக்கிறார் ஷுப்மன் கில்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி சாம்பியன் பட்டம் வரலாறு படைத்த நிலையில் 2025-27 ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தொடரில் களமிறங்குகிறது இந்திய அணி…
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெடிங்லீயில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட கருண் நாயர் உள்ளூர் முதல் தரப்போட்டிகளில் சாதித்து அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்த தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கருண் நாயர் இரட்டை சதம் விளாசியதன் மூலம் ஆடும் லெவனில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். இவருடைய நண்பர் கே.எல் ராகுலும் சதம், அரைசதம் விளாசி தனது ஃபார்மை நிரூபித்துள்ளார். லீட்ஸ் நகரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி விலகியது அணியில் பெரிய இடைவெளியை உருவாக்கும் என்றும் அவர் ஆடிய இடத்தில் கில் விளையாடுவார் என்றும் கூறினார். தான் 5 ஆவது இடத்தில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் பந்த் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து மண்ணில் கிரிக்கெட் என்றாலே ஸ்விங்கிற்கும் பஞ்சம் இருக்காது. அந்தவகையில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா கூட்டணி அசத்தும் என்றும் அஸ்வின் இல்லாத குறையை ஜடேஜா தீர்த்துவைப்பார் என்றும் நம்பலாம். பயிற்சி ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ஷர்துல் ஆல்ரவுண்டராக அசத்த காத்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் அசத்திய தமிழ்நாடு வீரர்களான சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறுவது சந்தேகமே.
பெண் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இம்முறை எப்படியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்ற வெறியோடு சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்கிறது. பேட்டிங்கில் ஜோ ரூட், ஆலி போப், பென் டக்கெட் சிறந்த ஃபார்மில் இருப்பது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலே, ஆல்ரவுண்டரும் கேப்டனுமான ஸ்டோக்ஸ் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தில் இருக்கிறார் எனவே வெற்றியோடு விடைகொடுக்க காத்திருக்கிறார்.
கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் டங், பிரைடன் கார்ஸ், உள்ளடக்கிய வேகக்கூட்டணி இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழும். இவர்களுடன் சேர்த்து சுழற்பந்துவீச்சாளர் ஷோயப் பஷீர் அணிக்கு கூடுதல் வலு சேர்க்கிறார். ஹேரி புரூக், ஜேமி ஸ்மித். கார்ஸ் மற்றும் டங் ஆகியோர் இந்தியாவிற்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகின்றனர்.
இரு அணிகளும் இதற்கு முன் 132 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 51 வெற்றியும், இந்தியா 31 வெற்றியையும் பதிவு செய்துள்ளன. 50 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடந்த 18 ஆண்டுகளாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற சோகமான வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஷுப்மன் கில்லின் படை.
June 20, 2025 6:55 AM IST


