Last Updated:
15 ஆண்டு கால நிலப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அஸ்கர் அலி வோராவுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சிறுவயது பள்ளித் தோழரான அஸ்கர் அலி வோராவுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில், பிரதமர் உடனான சந்திப்பிற்குப் பிறகு தீர்வு கிடைத்துள்ளது.
குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் படித்தவர் அஸ்கர் அலி வோரா (81). தற்பொழுது மீரா ரோட் பகுதியில் வசித்து வரும் இவர், கடந்த 1989-ஆம் ஆண்டு பாயந்தர் கிழக்கில் உள்ள நவஹர் பகுதியில் சுமார் 2,810 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கினார்.
இருப்பினும், 2011-ஆம் ஆண்டு இந்த நிலத்தை ‘சுவயம் பில்டர்ஸ்’ மற்றும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவுக்குச் சொந்தமான ‘செவன்-எலவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக அஸ்கர் அலி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக நிலத்தை மீட்பதற்காக அவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு அதிகாரிகளை அணுகிப் போராடி வந்தார்.
நீண்ட காலமாகத் தீர்வு கிடைக்காத நிலையில், அஸ்கர் அலி வோரா கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி புதுடெல்லியில் தனது பள்ளித் தோழரான பிரதமர் நரேந்திர மோடியைச் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தனது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து விவரித்து, தனக்கு நீதி கிடைக்க தலையிடுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
பிரதமரைச் சந்தித்த சில நாட்களிலேயே இந்த விவகாரத்தில் தீர்வு கிடைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் (மந்திராலயா) முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீகர் பரதேசி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் அஸ்கர் அலி வோரா, பாஜக தலைவர் நரேந்திர மேத்தா, மீரா-பாயந்தர் மாநகராட்சி ஆணையர் ராதா வினோத் சர்மா மற்றும் நகரமைப்பு அதிகாரி புருஷோத்தம் ஷிண்டே ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டது. பாஜக தலைவர் நரேந்திர மேத்தா சர்ச்சைக்குரிய நிலத்தின் ஆக்கிரமிப்பைக் கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், நகரமைப்புத் துறையிடம் சமர்ப்பித்த கடிதத்தில், அந்த நிலத்தில் கட்டிடங்கள் கட்ட வழங்கப்பட்ட அனுமதிச் சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அஸ்கர் அலி வோராவுக்கு எதிராகப் பதிவு செய்திருந்த புகாரையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் காவல் ஆணையருக்கு நரேந்திர மேத்தா கடிதம் எழுதியுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, 15 ஆண்டு கால நிலப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அஸ்கர் அலி வோராவுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.


