Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி, 14 ஆண்டுகளாக காலணி அணியாமல் இருந்த ராம்பால் காஷ்யப்புக்கு காலணி அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
14 ஆண்டுகளாக காலணி அணியாமல் இருந்த ஹரியானாவைச் சேர்ந்த நபருக்கு பிரதமர் நரேந்திர மோடி காலணி அணிவித்து மகிழ்ந்தார்.
ஹரியானா மாநிலம், கைத்தால் பகுதியைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப், பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக உள்ளார். நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் சூளுரைத்தார். மேலும், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதுடன், தன்னை நேரில் சந்திக்கும் வரை காலணி அணியப் போவதில்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில், காலணி அணியாமல் வெறும் காலில் நடந்துவந்த அவரை, ஹரியானா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, யமுனாநகர் பகுதியில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது நேரில் அழைத்தார். மேலும், தான் வாங்கிவந்த காலணியை வழங்கி அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பிரதமர் முன்னிலையில் ராம்பால் காஷ்யப் காலணியை அணிந்து தனது சூளுரையை நிறைவேற்றிக் கொண்டார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ராம்பால் போன்றோரின் ஆர்வம் தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், சமூகப் பணிகளிலும், நாட்டை கட்டமைப்பதிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
April 14, 2025 10:00 PM IST


