சென்னை: சூரிய வீடு இலவச மின் திட்டத்தின் கீழ் இதுவரை 13,560 பேர் தங்கள் வீடுகளில் சூரியசக்தி மின்நிலையங்களை அமைத்துள்ளனர். நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு, ‘பி.எம். சூரியகர் – முப்த் பிஜ்லி யோஜனா’ எனப்படும், சூரிய வீடு இலவச மின் திட்டத்தை, ஜனவரியில் பிரதமர் மோடி அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், வீட்டு மேற்கூரையில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த மின் நிலையம் அமைப்பதன் மூலம் குடும்பத்துக்கு, மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும். உபரி மின்சாரத்தை, மின் வாரியத்துக்கு விற்கலாம்.
இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண் ணப்பிக்க வேண்டும். ஒரு கிலோவாட் திறனில் மின் நிலையம் அமைக்க ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் அமைக்க ரூ.78 ஆயிரம் என மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த தொகை, சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கும் பணி முடிந்த 30 நாட்களுக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இந்த தொகை செலுத்தப்படும்.
இந்நிலையில், இத்திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை, இத்திட்டத்தின்கீழ் 13,560 பேர் விண்ணப்பித்து தங்கள் வீடுகளில் சூரியசக்தி மின்நிலையங்களை அமைத்துள்ளனர். மேலும் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.