13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கிறதா மத்திய அரசு?
சமூக வலைதளங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக இவற்றுக்கு அடிமையாகி எப்போதுமே இதிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இதனால் குழந்தைகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் இந்தியாவிலும் குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் அனுமதியின்றி கணக்குகள் தொடங்கவும் , பயன்படுத்தவும் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. The Safeguarding Healthy Internet Environments for Little Digital-Natives (SHIELD) Bill என்ற பெயரில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பாக இந்த மசோதா கொண்டு வரப்படவில்லை. மாறாக பாஜக எம்பி வைஜயந்த் பாண்டா இந்த தனிநபா் மசோதாவை முன்மொழிந்துள்ளார். அதில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நலன் கருதி சமூக வலைதளங்கள், ஆன்லைன் கேமிங் தளங்களுக்கு உரிய பாதுகாப்பு விதிகளை வகுக்க வேண்டும் என கூறியுள்ளார். குறிப்பாக 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய விளையாட்டு தளங்களில் பெற்றோரின் அனுமதியின்றி கணக்குகள் தொடங்க தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பட்சத்தில் பெற்றோா் அல்லது பாதுகாவலா்கள் அதில் தனியுரிமை அமைப்புகளை பாா்வையிடவும் கண்காணிக்கவும் , செல்போன்களை பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்தும் வகையிலான வசதிகளையும் கொண்டு வர வேண்டுமென அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள் பயன்படுத்தும் தளங்களில் ஆன்லைன் சூதாட்டம், போதை பொருள்கள் விளம்பரங்கள், ஆபாச பதிவுகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
தொடா்ச்சியாக விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களின் இணைய சேவைகளுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69 ஏ-இன்கீழ் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடை விதிக்க வேண்டும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா வெள்ளிக்கிழமை பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், இரு அவைகளும் முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டதால் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த சூழலில் இன்று இந்த மசோதா அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தனிநபர் மசோதாக்கள் அனைத்துமே சட்டமாக மாறுவது இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் சொற்ப எண்ணிக்கையிலான தனிநபர் மசோதாக்களே சட்டமாக மாறியுள்ளன.இருந்தாலும் சமூகத்திற்கு நன்மை குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நன்மை என்ற பொதுகருத்தின் அடிப்படையில் இந்த தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறினால் நன்றாக இருக்கும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து.

