Last Updated:
128 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் குழு கூட்டம் அண்மையில் துபாயில் நடைபெற்றது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய கட்டுப்பாடுகளால் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
1900 கோடைக்கால ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்ற ஆண்கள் போட்டியில், கிரேட் பிரிட்டன் பிரான்ஸை வீழ்த்தி வென்றது. இந்த நிலையில் தான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வரும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் குழு கூட்டம் அண்மையில் துபாயில் நடைபெற்றது.
இதில், லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் ஆடவர் பிரிவில் 6 அணிகளும், மகளிர் பிரிவில் 6 அணிகளும் கலந்து கொள்ளும் என்றும் மொத்தம் 28 போட்டிகள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
6 அணிகளில் அமெரிக்கா போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நேரடியாக தகுதி பெறும் என்று தெரிகிறது. மற்ற அணிகளை ஆசியா, ஓசேனியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா பிராந்திய அடிப்படையில் பிரித்து, அவற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐசிசி தரவரிசையில் ஆசிய அளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஓசேனியாவில் ஆஸ்திரேலியாவும், ஐரோப்பாவில் இங்கிலாந்தும், ஆப்பிரிக்க அளவில் தென்னாப்பிரிக்க அணியும் முன்னிலையில் உள்ளன. இதன்படி பார்த்தால் பாகிஸ்தான் அணி ஒலிம்பிக்கில் இடம்பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, முதலில் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் முதல் ஆறு இடங்கள் பிடிக்கும் அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த முடிவை மாற்றி தற்போது பிராந்திய அடிப்படையில் அணிகள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 08, 2025 2:20 PM IST


