Last Updated:
கல்பனா சரோஜ் குழந்தை திருமணம், குடும்ப வன்முறை அனுபவித்து, தன்னம்பிக்கையால் 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலதிபராக மாறியவர்.
குடிசையில் இருந்து கோபுரத்திற்கு சென்ற பலவிதமான சாதனை கதைகளை நாம் கேட்டிருக்க வேண்டும். அதேபோல தான் இந்த கல்பனா சரோஜ் என்பவரின் கதையும் எல்லா விதத்திலேயும் அனைவரையும் ஊக்குவிக்கும் ஒன்றாக அமைகிறது. குழந்தை பருவத்திலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டு, வீட்டில் பல கொடுமைகளை அனுபவித்து, எனினும் தன்னுடைய தன்னம்பிக்கையை கைவிடாமல் அதிலிருந்து வெளியேறி தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பிசினஸ் ஜாம்பவானாக மாறி உள்ளவர்தான் கல்பனா சரோஜ். இவருடைய சாதனை பயணத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கல்பனா சரோஜ் என்பவர் 1961இல் ஒரு தலித் மராட்டி புத்திசம் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மகாராஷ்டிராவில் உள்ள ரோபர்கேடா என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இவருடைய அப்பா ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். குழந்தை பருவத்தில் இருந்தே இவர் பல்வேறு விதமான சவால்களை சந்தித்துள்ளார். குழந்தை திருமணம் முதல் குடும்ப வன்முறை வரை இவர் சந்திக்காத பிரச்சனையே கிடையாது. இவருடைய சமூகத்தில் குழந்தை திருமணம் என்பது ஒரு வழக்கமாக பின்பற்றப்பட்டு வந்தது. திருமணமான பிறகு இவர் மும்பையில் உள்ள குடிசைப்பகுதியில் கணவனுடைய குடும்பத்தோடு வாழ்ந்து வந்துள்ளார். அங்கு இவர் பல்வேறு விதமான உடல் மற்றும் மன ரீதியான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இவரை ஒரு வீட்டு பணிப் பெண்ணை போல அவர்கள் நடத்தியுள்ளனர்.
நாளுக்கு நாள் கல்பனாவின் நிலை மோசமாகி, உடல் எடை குறைந்து மெலிந்து காணப்பட்டார். அப்படி ஒரு நாள் அவருடைய தந்தை சர்ப்ரைஸாக இவரை அங்கு வந்து சந்தித்திருக்கிறார். கல்பனாவின் நிலையை பார்த்த அவரது தந்தை கணவன் வீட்டில் இருந்து அவரை காப்பாற்றி சென்று இருக்கிறார். தன்னுடைய அப்பாவின் ஆதரவோடு கணவனை விட்டு வெளியேறினார். ஆனால் அதே சமயத்தில் அவருடைய சமூகத்தில் இதனை ஏற்றுக் கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை. கிராமத்திற்கு சென்ற பிறகு இவரை தீண்ட தகாத ஒரு நபரை போல நடத்தியுள்ளனர்.
தன்னுடைய டீனேஜ் பருவத்தை முழுக்க முழுக்க இருட்டிலும், வெறுமையிலும் அனுபவித்து இருக்கிறார். 16 வயதில் கல்பனா மும்பையில் வாழ்ந்து வந்த தன்னுடைய மாமாவுடன் வசிப்பதற்காக அங்கு சென்று இருக்கிறார். தன்னுடைய குடும்பத்திற்கு உதவுவதற்காக ஒரு கார்மெண்ட் தொழிற்சாலையில் 2 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார். பிறகு வெற்றிகரமாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரசு வழங்கும் 50,000 ரூபாய் கடன் உதவியுடன் ஒரு தையல் தொழிலை ஆரம்பித்து, பின்னர் ஒரு மர சாமான் கடையையும் துவங்கினார். ஒவ்வொரு மாதமும் 50 ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்தார். புத்திசாலித்தனமான பெண்ணாக இருந்து தன்னுடைய பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இப்படி 1990இல் கல்பனா சரோஜ் தன்னுடைய சொந்த தொழிலை அமைத்து KS ஃபிலிம் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதில் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய வலிமையான நெட்வொர்க் மூலமாக ரியல் எஸ்டேட் தொழிலையும் விரிவுப்படுத்தி இருக்கிறார்.
காமணி டியூப்ஸ் நிறுவனத்தின் போர்ட் மெம்பராக இருந்த இவர் கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருந்த அந்த நிறுவனத்தை ஒரு சவாலாக கருதி 2001 ஆம் ஆண்டில் 50 லட்சம் ரூபாய்க்கு அதனை சொந்தமாக வாங்கி விட்டார். 3 வருடங்களாக 3500 தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வழங்காத அந்த நிறுவனத்தை கல்பனா சரோஜ் வாங்கி தற்போது அவருடைய தலைமையில் அந்த நிறுவனம் 1000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி வருகிறது.
ஒரு காலத்தில் 2 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கல்பனா சரோஜ் தற்போது 112 மில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர். அறிக்கைகளின் படி, இவருக்கு தற்போது 917 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. மேலும் ஏப்ரல் 2013 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பிரனவ் முகர்ஜியிடமிருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றிருக்கிறார். 22 வயதில் சமீர் சரோஜ் என்பவரை மறுத்திருமணம் செய்துள்ளார். எனினும் 1989இல் இந்த தம்பதியினர் விவாகரத்து பெற்று விட்டனர். இவர்களுக்கு அமர் சரோஜ் என்ற ஒரு பையனும், சீமா சரோஜ் என்ற ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
June 15, 2025 6:41 PM IST


