Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
சென்னை: 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ்நாட்டில் அழுகாச்சி அமைச்சர்களை பார்க்கும் சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். அப்போது ஓபிஎஸ் முதல்வாக்கப்பட்டு, அமைச்சரவை அமைக்கப்பட்டது. அப்போது அனைவருமே கண்ணீருடன் பதவியேற்று கொண்டனர். தற்போது அதேபோல் ஜனநாயகன் படத்தை பார்த்து அத்தனை அமைச்சர்களும் கண்ணீர்விட்டு கதறுவதை தமிழக மக்கள் பார்க்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வர் விஜய்யின் விசுவாசி யார் என்பதை நிரூபிக்க தவெக எம்எல்ஏ-க்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டியே ஏற்பட்டுள்ளது. தவெக எம்எல்ஏ-க்களின் வெற்றிக்கு முழுக்க முழுக்க விஜய்யே காரணமாக இருப்பதால், விஜய்யின் புகழ் பாடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படம் ஜூலை 23ஆம் தேதி ரிலீஸாகியது. அதனை முதல் நாள் முதல் ஷோவாக பார்க்க அமைச்சர்கள் அனைவரும் முண்டியடித்து வந்தனர். அதிலும் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், பர்வேஸ், விக்னேஷ், வினோத், சம்பத் குமார், விஜய் பாலாஜி உள்ளிட்ட பலரும் கேமரா முன்பாக கண்ணீர் கண்ணீர் தேம்பி தேம்பி அழுதனர்.
ஒரு கட்டத்தில் யார் சிறப்பாக கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழுகிறார்கள் என்பதை கண்டறிய ஒரு போட்டியே நடத்தி இருக்கலாம் என்று யோசிக்க வைத்தது அவர்களின் ஃபெர்ஃபாமன்ஸ்.. கமல்ஹாசன் ஸ்டைலில் சொன்னால், “என்ன அவார்டா கொடுக்கிறாங்க.. இப்படி நடிக்கிறீங்களே” என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் கண்ணீர் காவியத்தால் சோசியல் மீடியாவில் மீண்டும் ஆஸ்கர் அவார்ட்டை கொடுடா டிரம்ப் மீம் வைரல்.
தவெக அமைச்சர்களின் அழுகாச்சி காவியத்தை பார்க்கையில், 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் தான் மக்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும். ஏனென்றால் தமிழக அரசியலில் சில அற்புதங்களை மீண்டும் மீண்டும் காணும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதனால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஓபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க, அதிமுக அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் நடந்தன. அப்போது அமைச்சராக பொறுப்பேற்ற வளர்மதி, செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, ஆர்பி உதயகுமார், கேசி வீரமணி உள்ளிட்டோர் தேம்பி தேம்பி அழுதனர்.
முதல்வராக பொறுப்பேற்ற ஓபிஎஸ்-ம் கர்சீப்பை வைத்து கொண்டு கண்ணை துடைத்துக் கொண்டே இருந்தது எல்லாம் யாராலும் மறக்க முடியாது. அதே காட்சியை தவெக அமைச்சர்கள் மீண்டும் அரங்கேற்றி இருக்கின்றனர். இது போதாதென்று A சான்றிதழ் கொடுக்கப்பட்ட ஜனநாயகன் படத்தை தனது கைக்குழந்தையுடன் சென்று எம்எல்ஏ பல்லவி பார்த்திருக்கிறார். இதனால் 2024ல் அதிமுக அமைச்சரவைக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல தற்போதைய தவெக அமைச்சர்கள் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

