Last Updated:
திருப்பதி திருமலையில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு ஓராண்டில் உலகம் முழுவதிலுமிருந்து சராசரியாக கிட்டத்தட்ட மூன்று கோடி பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஆந்திராவில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையான திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) தலைவர் பி.ஆர்.நாயுடு, வெறும் 11 மாதங்களில் ரூ.900 கோடிக்கும் மேல் நன்கொடைகள் வந்து குவிந்துள்ளது குறித்து பேசியபோது, தான் பொறுப்பேற்றதிலிருந்து அறக்கட்டளைகளுக்கு வரும் நன்கொடைகள் படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகள் மூலமும் மக்களிடம் இருந்து பங்களிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
ரூ.918.6 கோடி நன்கொடைகளில், ரூ.579.38 கோடி ஆன்லைன் மூலமாகவும், ரூ.339.20 கோடி ஆஃப்லைன் மூலமாகவும் வந்ததாக TTD தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார். உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார இந்து ஆலயங்களில் முதலிடத்தில் திருப்பதி திருமலையில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலுக்கு ஓராண்டில் உலகம் முழுவதிலுமிருந்து சராசரியாக கிட்டத்தட்ட மூன்று கோடி பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இதனிடையே திருப்பதி வரும் பக்தர்களுக்கு இலவச உணவு விநியோகம், மாநில கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு ஆதரவு, வேத கற்றலை பாதுகாத்தல் மற்றும் பரப்புதல் உள்ளிட்ட பல தொண்டு செயல்பாடுகளை மேற்கொள்ள TTD பல அறக்கட்டளைகளை அமைத்து நிர்வகித்து வருகிறது. அறக்கட்டளைகளில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா (SV) அன்னதானம் அறக்கட்டளை அதிகபட்சமாக கிட்டத்தட்ட ரூ.339 கோடியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.252 கோடிக்கும், ஸ்ரீ பாலாஜி ஆரோக்ய வரபிரசாதி திட்டத்திற்கு சுமார் ரூ.98 கோடியும் கிடைத்ததாக அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து எஸ்.வி.பிரானதான அறக்கட்டளை கிட்டத்தட்ட ரூ.67 கோடியையும், எஸ்.வி.கோசம்ரக்ஷணா அறக்கட்டளை ரூ.56 கோடிக்கும் அதிகமாகவும், எஸ்.வி.வித்யாதானம் அறக்கட்டளை ரூ.33.47 கோடியையும், பாலாஜி அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு நிறுவனம் (பி.ஐ.ஆர்.ஆர்.டி) அறக்கட்டளை ரூ.30 கோடியையும், எஸ்.வி.சர்வஷ்ரேயாஸ் அறக்கட்டளை ரூ.20.46 கோடியையும் நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எஸ்.வி.வேத பரிரக்ஷணா அறக்கட்டளைக்கு ரூ.13.87 கோடியும், ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி சேனலுக்கு (SVBC) ரூ.6.29 கோடியும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (SVIMS) ரூ.1.52 கோடியும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நன்கொடையாளர்கள் ஆன்லைன் வழியை அதிகம் விரும்புவதாகவும், கட்டுமானப் பணிகள், இயந்திரங்கள் வாங்குதல் மற்றும் கோயில் அமைப்பின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் பெருமளவு ஆதரவை வழங்குவதாகவும் நாயுடு கூறினார்.
October 23, 2025 7:48 PM IST


