Last Updated:
இந்த அசம்பாவிதம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காண்போர் மனதை உலுக்குகிறது
11 பேர் உயிரிழந்த பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்திருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதன் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதனால் உற்சாகத்தில் இருந்த RCB அணியின் ரசிகர்கள் இன்று நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள்.
அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என கணித்திருந்த மாநில அரசு ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும், பாராட்டு விழா மட்டும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. அதனைக் காண்பதற்காக மைதானத்திற்கு அருகே லட்சக்கணக்கானோர் கூடினார்கள்.
கட்டுக்கடங்காத கூட்டத்தைக் காவல்துறை அதிகாரிகளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த அசம்பாவிதம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காண்போர் மனதை உலுக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில், கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
June 04, 2025 10:30 PM IST


