1000% உயர்ந்த இன்சூரன்ஸ் ப்ரீமியம்.. ஈரான் போரால் விபரீதம்..!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதை தாண்டி புதிய பிரச்சனை அதை கொண்டு வருவதில் உருவாகியுள்ளது. ஒருப்பக்கம் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல் நடத்துகிறது, மறுபுறம் பாப் அல் மண்டெப் நீரிணையில் ஹவுதிகள் தாக்குதல் நடத்த துவங்கியுள்ளனர்.
இப்படியிருக்கையில் கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகளில் இருந்து கொண்டு வருவது என்பது உயிர் போய், உயிர் வரும் சம்பவமாக உள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் போக்குவரத்து சந்தையில் புதிய பிரச்சனயாக இன்சூரன்ஸ் ப்ரீமியம் விலை விளங்குகிறது.

ஒரு கப்பல் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்றால் அதன் விலையை தாண்டி பல கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது, இதில் முக்கியமானது ரிஸ்க் இன்சூரன்ஸ். தற்போது போர் அச்சம் அதிகமான காரணத்தா கச்சா எண்ணெய்க்காக எண்ணெய் கப்பல்களை புக் செய்யும் நாடுகள் War-risk insurance செலுத்த வேண்டியுள்ளது, இப்படி செலுத்தப்படும் கட்டணம் கடந்த 5-6 மாதத்தில் 1000 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது இறக்குமதி செய்யப்பட்டும் கச்சா எண்ணெய் விலையை பெரிய அளவில் உயர்த்தி வருகிறது, மேலும் தற்போது பெர்சியன் வளைகுடா + செங்கடல் என இரண்டு வழித்தடத்திலும் போர் அச்சம் அதிகரித்துள்ளது.
இதுக்குறித்து Equirus Raghnall Insurance Broking வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுவாக ஒரு கப்பல் இருக்கும் சரக்கின் மதிப்பில் 0.2-0.5 சதவீதம் வரையிலான தொகைக்கு இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்தப்படும், ஆனால் தற்போது 3-5 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வளைகுடா நாடுகளில் பயணிக்கும் கப்பல்களுக்கான ப்ரீமியம் 200 முதல் 1000 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்த ப்ரீமியம் உயர்வு வளைகுடா எண்ணெய்க்கு மட்டும் அல்லாமல் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கும் அதிகரித்துள்ளது. இந்திய கடல்வழி போக்குவரத்து இன்சூரன்ஸ் சந்தையின் மதிப்பு மட்டும் 5500 – 5800 கோடி ரூபாயாக உள்ளது.

