மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கஸ்பா பகுதியில் சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சட்டம் பயின்று வருகின்றனர். இதே கல்லூரியில் பயின்றும் வரும் 24 வயதான மாணவி ஒருவர், கடந்த புதன் கிழமை அன்று தேர்வு விண்ணத்தை பூர்த்தி செய்து கொடுக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த கல்லூரி ஊழியர் ஒருவர், இரு மாணவர்களுடன் சேர்ந்து அந்த மாணவியை வலுக்கட்டாயமாக ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார்.
அங்கு, பாதுகாவலர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் வைத்து அடித்து, மிரட்டி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கஸ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கல்லூரியில் பணியாற்றி வரும் 31 வயதான மனோஜித் மிஸ்ரா என்பது தெரியவந்தது.
மேலும் அவருடன் வந்தவர்கள் அதே கல்லூரியில் படிக்கும் 20 வயதான பிரமித் முகர்ஜி மற்றும் 19 வயதான ஜைப் அகமது என்பது தெரியவந்தது. இதில், முக்கிய குற்றவாளியான மனோஜித், முன்னாள் மாணவர் என்பதுடன் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பின் நிர்வாகி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர், சட்டக் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
அதற்கு அந்த மாணவி, தான் ஏற்கனவே வேறொருவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அப்படி இருந்தும், மாணவிக்கு தொடர்ந்து மனோஜித் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சூழலில் தான் சம்பவத்து அன்று இரவு 7.30 மணியளவில் கல்லூரி வளாகத்திற்கு மாணவி தனியாக நடமாடியுள்ளார். அப்போது, அங்கு வந்த மனோஜித், இரு மாணவர்களின் உதவியுடன் அவரை மிரட்டி தனி அறைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.
அங்கு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை, வீடியோ எடுத்துள்ளார். அப்போது, அவர்களிடம் இருந்து மாணவி தப்பிக்க முயன்றபோது, ஹாக்கி மட்டையால் அடித்து நிலைகுலைய செய்துள்ளனர். பின்னர், நடந்ததை வெளியே கூறினால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி ஊழியர் உட்பட 3 பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில், பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இச்சம்பவம் நிகழ்ந்து 10 மாதங்களே ஆன நிலையில், தற்போது கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி, கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
Kolkata,West Bengal
June 27, 2025 10:19 PM IST
கல்லூரி வளாகத்திலேயே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொல்கத்தாவில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்!

