10ல் 9 பேர் நஷ்டத்தை மட்டுமே சந்திக்கும் F&O சந்தை.. மத்திய அரசின் கிடுக்கு பிடி வேலை செய்யுது!
பியூச்சர்ஸ் அண்ட ஆப்ஷன் டிரேடிங் சாதாரண பங்கு வர்த்தகத்தை போல் அல்லாமல் அதிகப்படியாக கணிப்புகள் அடிப்படையில் நடக்கும் விஷயமாக உள்ளது, இதனால் இதில் முதலீடு செய்யும் பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் செபி நடத்திய ஆய்வில் தனிநபர் முதலீட்டாளர்கள் பிரிவில் அதாவது சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் F&O பிரிவில் முதலீடு செய்யும் அனைத்து தரப்பினர் மத்தியில் 10ல் 9 பேர் நஷ்டத்தை மட்டுமே கடந்த 2 ஆண்டுகளாக சந்தித்து வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தான் மக்களின் நலனுக்காக இந்தியா அரசும், செபி அமைப்பும் சிறு மற்றும் தனிநபர் முதலீட்டாளர்கள் F&O துறையில் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக அதிகப்படியான எஸ்டிடி வரி, ஒப்பந்த லிமிட், லாட் அளவில் உயர்வு என பல மற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாற்றத்தின் வாயிலாக F&O துறையில் முதலீடு செய்யும் தனிநபர் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை 2025ஆம் நிதியாண்டில் 106.2 லட்சத்தில் இருந்து 2026ஆம் நிதியாண்டில் 87.5 லட்சமாக குறைந்துள்ளது.
இதேபோல் இப்பரிவு முதலீட்டிற்கு புதிதாக வரும் நபர்களின் எண்ணிக்கையும் 34.3 லட்சத்தில் இருந்து 20.8 லட்சமாக குறைந்துள்ளது. இதேபோல் 2026ஆம் நிதியாண்டில் சுமார் 46 லட்சம் பேர் F&O சந்தையில் இருந்து வெளியேறியுள்ளனர். வெளியேறியுள்ள பெரும் பகுதியினர் வருடம் 10000 ரூபாய் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் தான் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
ஆயினும் 2026ல் F&O வர்த்தகம் வாயிலாக தனிநபர் முதலீட்டாளர்கள் சுமார் 91,685 கோடி ரூபாயை இழந்துள்ளனர் என செபி தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இப்பிரிவு முதலீட்டு சந்தையில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இழப்பின் அளவு பெரிய அளவில் குறையாமல் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
இதில் முக்கியமாக ஆப்ஷன் டிரேடிங் பிரிவில் சுமார் 92 சதவீதம் பேர் இழப்பை எதிர்கொண்டு உள்ளனர், அடுத்த முக்கியமான விஷயம் வெறும் 23 சதவீத முதலீட்டாளர்கள் 90 சதவீத இழப்பை ஏற்றுக்கொண்டு உள்ளனர். இதன் மூலம் சாராசரியாக ஒரு நபரின் இழப்பு அளவு 1.47 லட்சமாகவும், லாபம் சாராசரியாக 1.22 லட்சமாகவும் உள்ளது.
