Last Updated:
UIDAI என்பது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு ஆதார் என்றும் அழைக்கப்படும் தனித்துவ அடையாள எண்களை (UID) வழங்கும் ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.
ஒரு முக்கிய முயற்சியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கடந்த மாதம் நாட்டு குடிமக்களுக்கு தங்கள் குடும்ப உறுப்பினரின் மரணம் குறித்து தகவல் அளிக்கக myAadhaar போர்ட்டலில் ஒரு சேவையை தொடங்கியது. இந்நிலையில் ஆதார் தரவுத்தளத்தின் “துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை” பராமரிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இறந்த நபர்களின் சுமார் 1.17 கோடி ஆதார் எண்களை UIDAI செயலிழக்க (டீஆக்டிவேஷன்) செய்துள்ளது.
சமீபத்தில் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்ட இறப்பு பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு இந்திய பதிவாளர் ஜெனரலை (Registrar General of India), UIDAI கோரியதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. RGI தற்போது வரை, சிவில் பதிவு முறையை (CRS) பயன்படுத்தி 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் 1.55 கோடி இறப்பு பதிவுகளை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து உரிய சரிபார்ப்புக்குப் பிறகு, சுமார் 1.17 கோடி ஆதார் எண்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தனது சமீபத்திய அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.
“CRS அல்லாத மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் இதே போன்ற நடைமுறை தொடர்கிறது. இதுவரை சுமார் 6.7 லட்சம் இறப்பு பதிவுகள் பெறப்பட்டுள்ளன, மேலும் அங்கு இறந்தவர்களின் ஆதார் எண்களை முடக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இறந்தவர்களின் ஆதார் எண்களை முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் மரணத்தை myAadhaar போர்ட்டலில் எவ்வாறு பதிவு செய்வது?
இறந்தவர்களின் குடும்பத்தினரே இறப்புச் சான்று மூலம் மரணித்த தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணை முடக்க விண்ணப்பிக்கலாம் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. மரணம் அடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர் இறந்த நபரின் ஆதார் எண் மற்றும் இறப்பு பதிவு எண்ணை போர்ட்டலில் பிற Demographic விவரங்களுடன் வழங்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர் சமர்ப்பித்த தகவலை முறையாக சரிபார்த்த பிறகு, இறந்த நபரின் ஆதார் எண்ணை செயலிழக்கச் செய்வது அல்லது மற்றபடி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல இறப்பு பதிவுகளை வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து பெறுவது குறித்தும் UIDAI பரிசீலித்து வருகிறது.
இறந்தவர்களின் ஆதார் எண்களை அடையாளம் காண்பதில் மாநிலங்களின் ஆதரவும் பெறப்பட்டு வருகிறது. அதேபோல ஒரு முன்னோடி முயற்சியாக, 100 வயதுக்கு மேற்பட்ட ஆதார் எண் வைத்திருப்பவர்களின் மக்கள்தொகை விவரங்கள், மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இதற்கு காரணம் குறிப்பிட்ட 100 வயதிற்கு மேற்பட்ட நபர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பதை சரிபார்க்கவே. இது தொடர்புடைய மாநிலங்களின் சரிபார்ப்பு அறிக்கை கிடைத்ததும், அத்தகைய ஆதார் எண்ணை செயலிழக்கச் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபரின் இறப்புக்குப் பிறகு அவரது ஆதார் எண்ணை அங்கீகரிக்காமல் பயன்படுத்துவதைத் தடுக்க, ஆதார் எண் வைத்திருப்பவர்கள் இறந்துவிட்ட பின்னர், இறப்பை பதிவு செய்யும் அதிகாரிகளிடம் இருந்து உரிய இறப்புச் சான்றிதழ் பெற்ற பிறகு, அவர்களது குடும்ப உறுப்பினர்களின் இறப்பு குறித்து myAadhaar Portal-ல் தெரிவிக்க அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர்.
July 20, 2025 4:57 PM IST


