1 வருட சம்பளத்தை லஞ்சமாக கொடுத்தால் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை! ஸ்ரீதர் வேம்பு ஓப்பன் டாக்!
சில காலமாகவே அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பலர் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் பணி நியமனங்களில் நடக்கும் ஊழல் தான் என்று ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசு பள்ளியில் ஆசிரியராக வேண்டுமானால் அதற்கு பணியில் சேர்ந்த பிறகு கிடைக்கும் ஒரு வருட சம்பளத்தை முன்கூட்டியே லஞ்சமாக வழங்க வேண்டும் நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டையும் பகிர்ந்திருக்கிறார்.
தன்னுடைய X பதிவில் ஸ்ரீதர் வேம்பு, “தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் மட்டுமே அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். பெற்றோர்கள் அதிகளவில் தனியார் பள்ளிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அரசு பள்ளிகளின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக மோசம் அடையத் தொடங்கியுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கடன் வாங்கியாவது தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதோடு அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் இன்றளவும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆசிரியர் பணியை பெறுவதற்கு, பணியில் சேர்வதற்கு முன்னரே ஒரு வருட சம்பளத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே அரசு பள்ளிகளின் கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதை விட ஆசிரியர் நியமன முறையை சீரமைப்பது தான் தற்போதைய அவசர தேவையாக இருக்கிறது. ஆனால் இன்றளவும் அரசு பள்ளிகளில் சில அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

இது போன்ற ஆசிரியர்களை நாம் அதிகரிக்க வேண்டும். அதற்கு கண்டிப்பாக இந்த பணியில் உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும். ஒரு சில அரசு பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு சில பள்ளிகளில் அப்படி இல்லை. முதலில் ஆசிரியர் நியமனத்தை சரி செய்ய வேண்டும். அதன் பிறகு அரசு பள்ளியில் உள்ள கட்டமைப்பு வசதியை சரி செய்து கொள்ளலாம். நான் ஒரு அரசு உதவி பெறும் இலவச பள்ளியில் தான் படித்தேன்.
நாங்கள் இலவச தனியார் பள்ளிகளையும் நடத்தி வருகிறோம். அதை மேலும் விரிவுபடுத்துவோம். ஆனால் நாம் அரசு பள்ளிகளை சரி செய்ய வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு இலவச பள்ளிகள் தேவை,” என்று கூறி தமிழக முதலமைச்சரின் அலுவலகத்தையும் டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
ஏழை எளிய மாணவர்களை வருங்காலத்தில் சாதனையாளர்களாக மாற்றுவதில் அரசு பள்ளிகளுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. எனவே அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மட்டும் அழகுப்படுத்துவதோடு நின்று விடாமல் நல்ல தகுதியும் அர்ப்பணிப்பும் உள்ள ஆசிரியர்களை கொண்டு வந்தால் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

