1 லட்சம் பேர் பணிநீக்கம்: Volkswagen நிறுவனத்தின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!
ஜெர்மனியை சேர்ந்த உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Volkswagen சுமார் 1 லட்சம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக கூறி அதிர்ச்சி தந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த கார் தயாரிப்பு நிறுவனங்களுமே திக்குமுக்காடி நிற்கின்றன.
ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் Volkswagen. பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தரமான கார்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வந்த இந்த நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இருக்கிறது. இதனால் உலக வாகன துறையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான பணிநீக்க மற்றும் நிறுவன சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2030-க்குள் ஒட்டுமொத்தமாக 1,00,000 பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்களும் சம்மதம் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட 50,000 பணிநீக்கங்களுடன், தற்போது புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட மேலும் 50,000 பணிநீக்கங்களையும் சேர்த்து மொத்தம் 1,00,000 பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர். இது இந்நிறுவன மொத்த ஊழியர்களில் சுமார் 15% ஆகும். உலக வாகனத் துறை வரலாற்றில் இதுவே பணி நீக்கம் ஆகும். இதற்கு முன்பு 2009-ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவாலானபோது 50,000 பேரை பணி நீக்கம் செய்தத்து.
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் நிறுவனத்தின் லாபத்தை பாதித்துள்ளன. அதே போல எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை உயர்ந்தது, சீன சந்தையிலும் ஐரோப்பிய சந்தையிலும் சீன நிறுவன வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்திருப்பது ஆகியவை இந்நிறுவன வாகன விற்பனையை பெருமளவில் குறைத்துவிட்டன.
தொடர் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் தவித்து வந்த நிறுவனம் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இதனால் ஹானோவர், எம்தான் , ஸ்விகாவு மற்றும் நெக்கர்சுல்ம் ஆகிய இடங்களில் உள்ள கார் உற்பத்தி ஆலைகளின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. Volkswagen நிறுவனம் தனது சொந்த நாடான ஜெர்மனியில் முழு அளவிலான ஆலைகளை மூடுவது இதுவே முதல் முறை.
முன்னதாக தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் பங்குதாரர்களை உள்ளடக்கிய மேற்பார்வைக் குழு, இந்த பணிநீக்க திட்டத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இது நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு ஒரு வலுவான சிக்னல் என தலைமை நிர்வாக அதிகாரி ஆலிவர் ப்ளூம் தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து நிறுவனத்தை மறு கட்டமைப்பு செய்ய முடிவு செய்துள்ள Volkswagen நிறுவனம், ஆலைகளை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது என்னென்ன மாற்று திட்டங்களை கொண்டு வந்தால் நிறுவனத்தை மீண்டும் லாப பாதைக்கு திருப்ப முடியும் என்ற ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

