Last Updated:
வெயிலின் தாக்கம் மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக விழுப்புரம் காய்கறி சந்தையில் கத்திரிக்காய் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
விழுப்புரம் காய்கறி சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.40க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய், இந்த வாரம் ரூ.60 முதல் ரூ.70 வரை உயர்ந்து விற்கப்படுகிறது. விளைச்சல் குறைவு மற்றும் சந்தைக்கு வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் கடும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல பகுதிகளில் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய சந்தைகளுக்கு காய்கறி வரத்து குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக கத்திரிக்காய் வரத்து குறைந்ததால், சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது.
அதேபோல், விழுப்புரம் மாவட்ட காய்கறி சந்தைகளிலும் பல காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. முன்பு ரூ.20க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய் தற்போது ரூ.60க்கு விற்கப்படுவதுடன், ரூ.30க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.50 முதல் ரூ.60 வரை உயர்ந்துள்ளது. மேலும் சௌசௌ, பீட்ரூட், இஞ்சி, பச்சை மிளகாய், கோஸ், அவரை, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, மாங்காய், தக்காளி உள்ளிட்ட பல காய்கறிகளின் விலையும் ரூ.20 வரை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் நிலவும் வெப்ப அலையால் பல்வேறு பகுதிகளில் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சந்தைகளுக்கு வரத்து குறைந்து, விலை உயர்வு ஏற்பட்டுள்ளது” என்றனர்.
மேலும், “காய்கறி விலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் தற்போது தேவையான அளவில் வாங்கி சேமித்து வருகின்றனர். முன்பு ஒரு கிலோ வாங்கிய வாடிக்கையாளர்கள் தற்போது கால் கிலோ அல்லது அரை கிலோ மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்” என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

