மதுரை அருகிலுள்ள பரவை மற்றும் மாட்டுத்தாவணி மார்க்கெட்டுகளில் வாழை இலை விலை கணிசமாக சரிந்துள்ளது. தினசரி பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி, பழங்கள் மற்றும் வாழை இலைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு இம்மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். சமீப காலமாக வத்தலகுண்டு, குள்ளபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழை இலைகள் அதிகளவில் வரத்து செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அதே அளவில் தேவை இல்லாததால் விலை சரிவடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கட்டு வாழை இலை ரூ.1000 வரை விற்பனையாக இருந்த நிலையில், தற்போது ரூ.800 ஆக குறைந்துள்ளது.


