Last Updated:
Gas Crisis| சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் சிக்கலில் சிக்கியுள்ளன. இதனால் உணவு பட்டியலும் விலையும் மாற்றமடைந்து வருகிறது.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் சிக்கலில் சிக்கியுள்ளன; இதனால் உணவு பட்டியலும் விலையும் மாற்றமடைந்து வருகிறது.
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்ற நிலை மற்றும் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வணிக கேஸ் சிலிண்டர்களின் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதன் தாக்கம் தமிழகத்தின் பல மாவட்டங்களைப் போலவே புதுக்கோட்டை மாவட்டத்திலும் தீவிரமாக உணரப்படுகிறது.
வணிகர்களுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் குறைவாக கிடைப்பதால், ஹோட்டல்கள் மற்றும் சிறிய உணவகங்கள் செயல்பாட்டில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் சில இடங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது; சில இடங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன; மேலும் சில ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் ஹோட்டல் நடத்தி வரும் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன. தற்போதைய சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விலையை உயர்த்தாமல் இருந்தால் நஷ்டம் அதிகரிக்கும் நிலையில் உள்ளோம். இல்லையெனில் சில உணவுப் பொருட்களின் தயாரிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது” என்றார்.
மேலும், மாற்று வழியாக விறகுகளை பயன்படுத்த நினைத்தாலும், அதன் விலையும் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய உணவகங்கள் வரை பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், பொதுமக்களுக்கும் விலை உயர்வு சுமையாக மாறும் என்பதால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

