ஹைதராபாத் அலுவலகம் மூடல்.. 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Zomato
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ தனது நிர்வாக செலவுகளை குறைக்கவும், நிர்வாக மறுசீரமைப்பு பணியில் ஒரு பகுதியாகவும் சுமார் 300 ஊழியர்கள் பணியாற்றும் ஹைதராபாத் அலுவலத்தை மொத்தமாக முட முடிவு எடுத்துள்ளது.
ஏஐ, வர்த்தக வளர்ச்சியில் மந்த நிலை, அதிகரிக்கும் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பல நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வரும் வேளையில் தற்போது சோமேட்டோ-வும் இதில் இறங்கியுள்ளது.

ஹைதராபாத்தில் 3ஆம் தரப்பு சேவை வாயிலாக பணியாற்றும் சுமார் 250-300 கால சென்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சோமேட்டோ முடிவு செய்துள்ளது. சோமேட்டோ தனது வாடிக்கையாளர் சேவை தளத்தை பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்து வரும் வேளையில் இத்தகைய முக்கிய முடிவை எடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்த பணிநீக்கத்தின் மூலம் ஹைதராபாத்-ன் மொத்த வாடிக்கையாளர் சேவை அலுவலகத்தை மொத்தமாக மூடுகிறது. தற்போது பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் யாரும் சோமேட்டோ-வின் நேரடி ஊழியர்கள் அல்ல, இவர்கள் அனைவரும் சோமேட்டோ-விற்காக 3ஆம் தரப்பு நிறுவனத்துடன் பணியாற்றும் ஊழியர்கள் ஆவார்கள்.
ஹைதராபாத்தில் மட்டும் அல்லாமல் கூர்கிராம்-ல் இருக்கும் வாடிக்கையாளர் சேவை பிரிவையும் சோமேட்டோ மறுஆய்வு செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
சாட்பாட், ஏஐ தொழில்நுட்பம் வந்த பின்பு வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருக்கும் கால் சென்டர் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்கள் பிரச்சனையை Chat மூலம் தீர்க்க முயற்சி செய்யும் காரணத்தால் பல சேவைகளை ஆட்டோமேட் செய்துள்ளது.
இதனால் நிறுவனங்களுக்கு செலவுகள் குறைவது தாண்டி வாடிக்கையாளரின் காத்திருப்பு காலம் குறைக்கிறது, தேவையான உதவிகள் 24 மணிநேரமும், வருடத்தின் 365 நாட்களும் தடையும், தாமதமும் இன்றி கிடைத்து வருகிறது.
சோமேட்டோ நிறுவனமும் Nugget என்ற சொந்தமாக உருவாக்கியுள்ள வாடிக்கையாளர் சேவை தளத்தின் மூலம் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறைகளை தீர்த்து வருகிறது. இந்த Nugget தளம் 2.2 பில்லியன் உரையாடல்களை நிர்வாகம் செய்து, 85 சதவீத கேள்விகளுக்கு ஆட்டோமேட் முறையில் பதில்களை அளித்து 99.9 சதவீத நேரம் ஆக்டிவாக கடந்த 18 மாதங்களாக இயங்கி வருகிறது.
இந்த வெற்றியின் வாயிலாகவே தற்போது 300 ஊழியர்கள் பணிநீக்கம், ஹைதராபாத் அலுவலகம் மூடல் போன்றவை நடக்கிறது. இதற்கு முன்பு 2025 ஏப்ரல் மாதம் சுமார் 600 வாடிக்கையாளர் சேவை ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
