Last Updated:
பாங்காக்கிலிருந்து மும்பைக்கு விமானத்தில் ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ கடத்தி வந்த மாடல் அழகி, சுங்கத்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார். 11 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலத்தை ட்ராலி பேக்கில் மறைத்து கடத்தி வந்தவர் சிக்கியது எப்படி?
‘மிஸஸ் கேரளா 2025’ போட்டியில் வெற்றி பெற்றவர், 28 வயதான மாடல் அழகி ஹர்ஷா சன்னி. ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ கடத்தலில் ஈடுபட்டு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வசமாக சிக்கி உள்ளார். பாங்காக்கிலிருந்து கஞ்சா கடத்தி உள்ளூரில் யாருக்கு கைமாற்ற இருந்தார்? எவ்வளவு லட்ச ரூபாய் பணம் வாங்கினார்? நடந்தது என்ன?
ஏர் இந்தியா விமானம் மூலம் பாங்காக்கிலிருந்து மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து மாடல் அழகி ஹர்ஷா சன்னியின் நடவடிக்கையைக் கவனித்த விமானப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது சன்னியின் டிராலி பையை சோதித்தபோது “பச்சை நிறப் பொருள்” நிரப்பப்பட்ட 12 வெற்றிட-சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் அதிகாரிகளின் கையில் சிக்கின. போதைப்பொருள் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் சட்டத்தின் கீழ் பரிசோதனைக் கருவியைக் கொண்டு அந்த இடத்திலேயே நடத்தப்பட்ட வேதியியல் சோதனையில், அப்பொருள் உயர்தர ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கடத்தியதற்காக NDPS சட்டத்தின் கீழ் ஹர்ஷா சன்னியைச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். 11 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’வின் மதிப்பு கிட்டத்தட்ட 11 கோடியே 82 லட்ச ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹர்ஷா சன்னியை ஃபோர்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
ஹர்ஷா சன்னிக்கு பாங்காக்கில் போதைப் பொருள் சப்ளை செய்தது யார்? அதை மும்பையில் வாங்க இருந்தது யார்? எவ்வளவு கோடி ரூபாய் பணம் கைமாறியது? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அதில் மேலும் பல முக்கிய தலைகள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Jun 12, 2026 10:01 PM IST


