Last Updated:
இந்தியாவில், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
உத்தரப்பிரதேச மாநில அரசு விரைவில் ‘No Helmet, No Fuel’ என்ற ஒரு புதிய 1 மாத சாலைப் பாதுகாப்புப் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது. இதன் கீழ் ஹெல்மெட் அணியாமல் வரும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்க மறுக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பிரச்சாரம் செப்டம்பர் 1 (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வரும், இது அந்த மாத இறுதி வரை நீடிக்கும். இந்தப் பிரச்சாரம் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளின் (DMs) மேற்பார்வையின் கீழ் மற்றும் மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும். மேலும், இது மாநிலக் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறை உட்பட பல துறைகளால் செயல்படுத்தப்படும்.
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, இந்தப் பிரச்சாரத்திற்காக முழுமையாக ஒத்துழைக்குமாறு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களும், அனைத்து எரிபொருள் நிலைய ஆப்ரேட்டர்களும் அரசின் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மாநிலப் போக்குவரத்து ஆணையர் பிரஜேஷ் நாராயண் சிங் கூறுகையில், இந்த முயற்சி தண்டனை அல்ல, பாதுகாப்பிற்கான உறுதிமொழி என்றார். இந்த ஒருமாத காலப் பிரச்சாரத்திற்குப் பொதுமக்கள், பெட்ரோல் பங்க் நடத்துபவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும், “முதலில் தலைக்கவசம், பின்னர் எரிபொருள்” என்பதை ஒரு விதியாக ஆக்குங்கள். ஏனெனில், தலைக்கவசம் அணிவது உயிர்களைக் காப்பாற்றும் எளிய காப்பீடு” என்றும் கூறினார்.
இந்தியாவில், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். 2019ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் (திருத்தம்) சட்டம், நான்கு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின்படி பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குகிறது.
ஹெல்மெட் அணியத் தவறினால் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து (DL) ஆகியவை தண்டனைகளாக இருக்கலாம். அதேநேரம் தலைப்பாகை அணிந்த சீக்கியர்களுக்கு மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் மட்டும் 67,000க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகன விபத்துகளில் இறந்துள்ளனர், இதில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல் விட்டவர்கள் ஆவர். அதோடு உலகில் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா பரவலாகக் கருதப்படுகிறது.
August 28, 2025 7:36 PM IST


