Last Updated:
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கின்போது இஸ்ரேலிய விமானங்கள் பறந்தன.
பெய்ரூட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கின்போது இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் வான்வெளியில் பறந்தன. இது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்கு எதிரான தெளிவான எச்சரிக்கை என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.
“ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கின்போது பெய்ரூட்டின் மீது பறந்த இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் ஒரு உறுதியான செய்தியை வெளிப்படுத்துகின்றன: இஸ்ரேலை அச்சுறுத்தி அழிக்க நினைக்கும் எவருக்கும் – இதுதான் அவர்களின் முடிவு” என்று அமைச்சர் காட்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலில் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலில் ஹிஸ்புல்லாவுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்ட நிலையில், கொல்லப்பட்ட தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கு நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்றது. பெய்ரூட்டில் நடந்த இந்த இறுதிச் சடங்கில் பல்லாயிரக்கணக்கானோர் கருப்பு உடையில் திரண்டு துக்கத்தில் கலந்து கொண்டனர். இதன்மூலம் ஹிஸ்புல்லாவுக்கு தங்கள் தொடர்ச்சியான ஆதரவை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
மேலும் மற்றொரு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட நஸ்ரல்லாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஹஷேம் சஃபீடினின் சவப்பெட்டியும் நஸ்ரல்லாவின் சவப்பெட்டியுடன் ஒரு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. கருப்பு நிற ஆடைகளும் ஹிஸ்புல்லாவின் மஞ்சள் கொடியும் அணிந்த பெண்கள் அழுது துக்கம் அனுசரித்தனர்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஹிஸ்புல்லாவை வழிநடத்திய தலைவர் நஸ்ரல்லா, கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பெரிய இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈரான் உள்ளிட்ட ஹிஸ்புல்லா ஆதரவாளர்களுக்குப் பேரிடியாக அமைந்தது.
பல தசாப்தங்களாக லெபனான் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஸ்புல்லா நாட்டின் பெரும்பான்மையான ஷியைட் முஸ்லிம் மக்களிடையே பலமான ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க: “நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் பதவி விலக தயார்” – ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
இறுதிச் சடங்கு நிகழ்வில் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய நஸ்ரல்லாவின் வாரிசான நைம் காசெம், ஹிஸ்புல்லா தனது “பாதையை” தொடர்ந்து பின்பற்றும் என்றும் லெபனான் மீது “அமெரிக்காவின் அடக்குமுறையை” ஒருபோதும் ஏற்காது என்றும் கூறினார். மேலும் “எங்கள் எதிர்ப்பு இன்னும் முடிவடையவில்லை, எதிர்ப்பு தொடரும். இஸ்ரேலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
துக்கத்தில் மூழ்கியிருந்த மக்கள் தங்கள் கைமுட்டிகளை கர்ச்சீஃப்களை உயர்த்தி, “நாங்கள் உங்கள் சேவையில் இருக்கிறோம், நஸ்ரல்லா” மற்றும் “நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு விசுவாசமாக இருக்கிறோம், நஸ்ரல்லா” என்று கோஷமிட்டனர். நஸ்ரல்லாவின் பதிவு செய்யப்பட்ட உரைகளும் நிகழ்வில் ஒலிபரப்பப்பட்டன.
⚡️Zionist terrorists warplanes over the funeral pic.twitter.com/pnCIMv4Zgg
— War Monitor (@WarMonitors) February 23, 2025
பாதுகாப்பு காரணங்களுக்காக பல மாதங்களாகத் தாமதமாக நடைபெற்ற இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட தூரம் நடந்து வந்தனர்.
February 24, 2025 12:33 PM IST
ஹிஸ்புல்லா தலைவர் இறுதிச்சடங்கிற்கு திரண்ட ஆதரவாளர்கள்..! ஓபனாக எச்சரிக்கை கொடுத்த இஸ்ரேல்


