Last Updated:
போர்ச் சூழலால் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இந்தியக் கப்பல் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் மோசமான பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கடல்சார் நிர்வாக பொது இயக்குநரகம் புதிய அவசர உத்தரவை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மறு உத்தரவு வரும் வரை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தவொரு வர்த்தகக் கப்பல்களிலும் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்த வேண்டாம் என்று கப்பல் உரிமையாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும் மாலுமிகளை வேலைக்கு அமர்த்தும் ஏஜென்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போரினால், உலகிலேயே மிக முக்கியமான கடல் வணிகப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) கொடியுடன் சென்ற ‘எம்.டி அல் பாஹியா’ மற்றும் ‘எம்.டி மொம்பாசா’ ஆகிய இரண்டு எண்ணெய் டாங்கர் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்தத் துரதிர்ஷ்டவசமான தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே, இந்திய அரசு இந்த அவசரப் பாதுகாப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கப்பல் மாலுமிகள் மற்றும் சர்வதேச வணிகப் பாதைகளைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய வன்முறைத் தாக்குதல்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) கடுமையாகக் கண்டித்துள்ளது. டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் துணைத் தூதரை நேரில் வரவழைத்து, இந்தியா தனது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.
கப்பல் நிறுவனங்கள் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு (ISPS) விதிகளின்படி கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அவசரக் காலங்களில் இந்தியாவின் ‘தகவல் இணைவு மையம் – இந்தியப் பெருங்கடல் பகுதி’ மற்றும் தகவல் தொடர்பு மையத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்த ஹார்முஸ் நீரிணை கடல் பாதை வழியாகவே பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இப்பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
“ஹார்முஸ் நீரிணைப் பகுதிக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப தடை.. போர் பதற்றத்தால் மத்திய அரசு அதிரடி உத்தரவு!”


