Last Updated:
ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலை விட 20 மடங்கு அதிகமாக தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்த நிலையில், புரட்சிகர காவல் படை பதிலடி கொடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் புரட்சிகர காவல் படை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து கடந்த 28 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலையில் பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், 29 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்தனர்.
ஈராக்கின் குர்திஸ்தான் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அருகே நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதியே தீப்பற்றி எரிந்தது.
இஸ்ரேல் மீதும் ஈரான் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. அவற்றை இஸ்ரேல் நடுவானிலேயே இடமறித்து அழித்து வருகிறது. இதுவரை இலகுரக ஏவுகணைகளை ஏவி வந்த நிலையில், இனி ஆயிரம் கிலோ எடையிலான சக்தி வாய்ந்த ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.
சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அந்நகரே புகை மண்டலம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலை விட 20 மடங்கு அதிகமாக தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.
Mar 10, 2026 12:42 PM IST
“ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது”- ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை


