மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு கச்சா எண்ணெய் கப்பல் இந்தியா வந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் ‘டார்க் மோட்’ முறையில் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா பிராந்தியங்களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கிய நுழைவாயிலாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் முடிவை ஈரான் அறிவித்ததால், அந்த வழியாக எண்ணெய் கப்பல்கள் பயணம் செய்வது கடினமான நிலை உருவானது.
இந்த பதற்றமான சூழ்நிலையிலும், சுமார் 1 லட்சத்து 35 ஆயிரத்து 335 டன் கச்சா எண்ணெய் ஏற்றிய ஒரு பிரம்மாண்ட கப்பல் பாதுகாப்பாக இந்தியாவை வந்தடைந்துள்ளது. லைபீரியா கொடியுடன் இயங்கும் “ஷென்லாங் சூயல்மாக்ஸ்” என்ற இந்த கப்பல், சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி துறைமுகமான ராஸ் தனுராவிலிருந்து கடந்த 1 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கியது. பல்வேறு பாதுகாப்பு சவால்களை கடந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு மும்பை துறைமுகத்தை அது சென்றடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பலின் பயணத்தை இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து தலைமையில் 29 பேர் கொண்ட சர்வதேச குழு மேற்கொண்டது. ஈரான் படைகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தபோது கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) தற்காலிகமாக அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலின் இருப்பிடத்தை வெளிப்படுத்தும் சிக்னல்கள் நிறுத்தப்பட்டதால் அது ‘டார்க் மோட்’ முறையில் மிகுந்த ரகசியத்துடன் அந்த பகுதியை கடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர் 9 ஆம் தேதி மீண்டும் அந்த சிக்னல்கள் இயக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த சந்திப்பில் இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி வழங்க ஈரான் சம்மதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே இந்த கப்பல் பாதுகாப்பாக அந்தப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

