International
-Nantha Kumar R
டெஹ்ரான்: ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு கப்பல்கள் பயணிக்க தொடங்கின. இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த சரக்கு கப்பல் மீது திடீர் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போர் முடிவுக்கு வந்தது. இருநாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த போர் முடிவடைந்தது. இதையடுத்து ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தது. மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய், கேஸ் உள்பட பிற சரக்கு கப்பல்கள் பயணத்தை தொடங்கி உள்ளன.

இருப்பினும் தொடர்ந்து பதற்றமான சூழல் தான் உள்ளது. சரக்கு கப்பல்கள் ஒருவித அச்சத்துடனே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வருகின்றன. இந்நிலையில் தான் சிங்கப்பூர் கொடியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை சரக்கு கப்பல் ஒன்று கடந்தது.
அப்போது அந்த சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த கப்பல் மீது திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கப்பலின் ஸ்டார்போர்ட் பகுதியில் ஏவுகணை போன்ற பொருள் தாக்கியதில் இதில் கட்டுப்பாட்டு அறை (Bridge) சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் ஓமானின் தஹித் (Dahit) துறைமுகத்திற்கு தென்கிழக்கே 7.5 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கப்பலின் ‘எவர் லவ்லி’என்று சொல்லப்படுகிறது. இந்த கப்பல் ட்ரோன் மூலம் ‘அட்டாக்’ செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்பது பற்றி தெரியவில்லை. இதன் பின்னணியில் ஈரான் ஈரான் இருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஈரான் தரப்பில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, கப்பல்களையும், மாலுமிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றும் தனது திட்டத்தை ஐநா சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதில் இருந்து பல மாதங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மற்றும் மாலுமிகளை மீட்க ஐநா சர்வதேச கடல்சார் அமைப்பு உதவி வந்த நிலையில் தற்போது அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி ஐந சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆர்செனியோ டொமிங்குவேஸ் கூறுகையில், ”ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மற்றும் மாலுமிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணி தடைப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தின் மீதான அச்சத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. ஏனென்றால உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.9 சதவீதம் அதிகரித்தது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை சீராகும்போது அதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றத்தின் பின்னணியிலும் முக்கிய காரணம் உள்ளது.
வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை அச்சுறுத்தினாலோ அல்லது தடுத்தாலோ அது பெரிய பிரச்சனையாக மாறும்” என்று வார்னிங் செய்திருந்தார். இப்படியான சூழலில் தற்போது சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த கப்பல் மீது தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. இதுதான் பதற்றத்துக்கு முக்கிய காரணம்.

