International
oi-Mani Singh S
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை தாக்கினல் ஈரானின் அனல் மின் நிலையங்கள் அல்லது பாலங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த எச்சரிக்கையால் கோபம் அடைந்த ஈரான், தங்களால் எண்ணெய் விற்க முடியாத நிலை ஏற்பட்டால் இந்த பிராந்தியத்தில் எண்ணெய் ஏற்றுமதியே இல்லாமல் போகும் என்று பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் மீது 12-வது நாளாக தாக்குதலை அமெரிக்கா தொடுத்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. போர் நிறுத்தத்திற்காக போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்கா, அந்த நாடு மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 12-வது நளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

எந்த நாடாலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது
இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை முடக்கினால், ஈரானில் பாலங்கள், மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த எச்சரிக்கையால் கடும் கோபமடைந்த ஈரான், தங்களால் எண்ணெயை விற்க முடியாத நிலை ஏற்பட்டால் எந்த நாட்டாலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை வரும் என்று எச்சரித்துள்ளது. ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
எங்கள் நாட்டின் பாதுகாப்பு
இந்த பிராந்தியத்தில் எங்களால் எண்ணெய் விற்க முடியாத நிலை வந்தால் வேறு யாராலும் விற்க முடியாது. எங்கள் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், பிராந்தியத்தில் எந்த உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது. அமெரிக்க படைகள் இல்லாமல் இருந்தால்தான் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த நிலை ஹார்முஸ் ஜலந்தியில் ஏற்படாது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் தளத்தில் கூறியதாவது:- இந்த நேரத்தில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது ராக்கெட், ஏவுகணை, டிரோன் என எதை கொண்டு தாக்கினாலும் அமெரிக்கா அதற்கு பதிலடியாக ஒரு பாலம் அல்லது அனல் மின் நிலையத்தை தாக்கும். தெஹ்ரானில் உள்ள கட்டமைப்புகள் அல்லது அதற்கு அருகில் உள்ள கட்டமைப்புகளும் இதில் அடங்கும்.. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மாறி மாறி மோதிக்கொள்வதால் பதற்றம்
கடந்த மூன்று மாதங்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் 30-க்கும் மேற்பட்ட எண்ணய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா, தங்கள் நாட்டின் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகத்தை நிறுத்துவோம் என்று ஈரானும் பதிலடி கொடுத்து இருக்கிறது.
இப்படி மாறி மாறி இருநாடுகளும் மோதிக்கொள்வது மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மோதல் நீடித்து வரும் நிலையில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக எண்ணய் வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹார்முஸ் கொண்டு இருப்பதால், அங்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் உடனடியாக சர்வதேச சந்தையில் எதிரொலிக்கும். இதனால், சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் உலக நாடுகளும் அங்குள்ள சூழலை உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றன.

