கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் 36 வயதான சூரஜ் சிவன்னா. இவருக்கு, 26 வயதான கானவி என்பவருடன் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பெங்களூருவில் இவர்களின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது. இதையடுத்து, புதுமணத் தம்பதியர் இலங்கைக்கு தேனிலவுக்கு சென்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் மகிழ்ச்சியாக உலாவிய இருவரும், நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டனர்.
அந்த புகைப்படங்களின் மூலம் இருவரும் அன்னியோன்யமாக இருந்ததை கண்டு உறவினர்கள் மகிழ்ச்சி கொண்டனர். ஆனால், திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே ஹனிமூனை கேன்சல் செய்துவிட்டு, இளம்ஜோடி சொந்த ஊர் திரும்பியது. ஏன், ஏதற்கு என்று உறவினர்கள் எதுவும் அவர்களிடம் கேட்காமல் இருந்துள்ளனர். திடீரென கடந்த வாரம் இளம்பெண் கானவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர், கிறிஸ்துமஸ் தினத்தன்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கானவியின் இந்த முடிவுக்கு அவரின் கணவர் சூரஜ் மற்றும் மாமியார் தான் காரணம் என பெண் வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே மாமியார் வரதட்சணை கொடுமைப் படுத்தியதாக கூறியுள்ளனர்.
அத்துடன், ஹனிமூன் சென்ற இடத்தில் கானவியின், முன்னாள் காதலன் குறித்து சூரஜ் தெரிந்து கொண்டுள்ளார். அதுகுறித்து மனைவியிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால், திருமணம் முடிந்து தேனிலவு சென்ற இடத்திலேயே கணவன் – மனைவிக்கு இடையே மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது. வீடு திரும்பியதும், கணவனுடன் சேர்ந்து மாமியார் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் புதுப்பெண்ணை குத்திக்காட்டி காயப்படுத்தியுள்ளனர்.
அதன் வலி தாங்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் விபரீத முடிவு எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டிய கணவன் மற்றும் மாமியாரை உடனே கைது செய்ய கோரி, பெண் வீட்டார் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த சூரஜ், தனது தாயார் மற்றும் சகோதரனுடன் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு தப்பியோடியுள்ளார்.
அங்கு, தங்கியிருந்த ஓட்டலில் சூரஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினரின் வீட்டில் தங்கியிருந்த அவரின் தாயாரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை, மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பெங்களூரு மற்றும் நாக்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூருவில் திருமணத்துக்கு முந்தைய காதல் விவகாரத்தை அறிந்து, கணவன் கொடுமைப் படுத்தியதால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் இருந்து மீள்வதற்குள், கைது நடவடிக்கைக்கு அஞ்சி அடுத்த இரண்டு நாட்களிலேயே அவரின் கணவனும் தனது உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
ஹனிமூன் சென்ற இடத்தில் ட்விஸ்ட்.. புது மண தம்பதிக்கு அடுத்தடுத்து நடந்த சோகம்.. அதிர்ச்சி பின்னணி என்ன?

