Last Updated:
மேகாலயாவில் தேனிலவு சென்ற புதுமணத் தம்பதியில், ராஜா ரகுவன்ஷி சடலமாக கண்டெடுக்கப்பட்டு, அவரது மனைவி சோனம் காணாமல் போனதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயா மாநிலம், கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோரா பகுதி முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சோரா என அழைக்கப்படும் சிரபுஞ்சி, உலகில் அதிகளவில் மழை பெய்யும் பகுதியாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சிரபுஞ்சிக்கு ஆண்டு தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவருக்கு, சோனம் என்ற பெண்ணுடன் கடந்த 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து புதுமணத் தம்பதி சிரபுஞ்சிக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு உற்சாகமாக சுற்றிப்பார்த்தவர்கள் 24 ஆம் தேதி, நோங்கிரியாட் கிராமத்தில் தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து, இருவரின் செல்போனுக்கும் குடும்பத்தினர் அழைத்தபோது, தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் போனதால் 8 நாட்களுக்குப் பின் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் புதுமணத் தம்பதியை நோங்கிரியாட் பள்ளத்தாக்கு முழுவதும் போலீசார் வலைவீசி தேடியுள்ளனர்.
அப்போது, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், இளைஞர் ஒருவரின் உடல் பாதி அழுகிய நிலையில் கிடந்துள்ளது. 30 வயதான அந்த நபரின் கையில் ராஜா என டாட்டூ குத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் அது புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷி என்பதை குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பெண் ஒருவரின் வெள்ளை நிற சட்டை, உடைத்துபோன செல்போன் கவர், மாத்திரைகளும் கிடந்துள்ளன.
இதையடுத்து, ராஜா ரகுவன்ஷி மரணம் குறித்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், அவரின் மனைவி சோனமை தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனிடையே, தங்கும் விடுதி ஊழியர்கள், வாடகைக்கு பைக் கொடுத்தவர்கள் மற்றும் சுற்றுலா முகவர்கள் மீது சந்தேகம் உள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். விடுதியை காலி செய்த சிறிது நேரத்தில் புதுமணத் தம்பதி மாயமானதால், இவர்கள் தான் ஏதாவது செய்திருக்கலாம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதன் அடிப்படையில் தங்கும் விடுதி ஊழியர்கள் உட்பட பலரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இளம்பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிரபுஞ்சிக்கு தேனிலவு சென்ற இடத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி காணாமல் போனதால், என்ன நடந்தது என்று தெரியாமல் குடும்பத்தினர் கதிகலங்கிப் போயுள்ளனர். மேகாலயாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
June 04, 2025 3:21 PM IST
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு.. புதுப்பெண் திடீர் மாயம்… என்ன நடந்தது?


