ஷாக் கொடுக்கும் தங்கம், பிட்காயின் விலை.. திடீரென, தடாலடியாக உயர்வு ஏன்..?
உலகச் சந்தையில் இந்த வாரம் பிட்காயின் மற்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து. டாலர் மதிப்பில் ஏற்பட்ட தடுமாற்றம், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டது என அனைத்தும் முதலீட்டு சந்தையை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது.
தங்கம் விலை உயர்வை கடந்த 2-3 வாரங்களாகவே முதலீட்டளர்கள் பார்த்து வந்தாலும் பிட்காயின் விலையில் கொடுத்த கம்பேக் மிகப்பெரியது என்றால் மிகையில்லை. இந்த தடாலடி உயர்வுக்கு முக்கிய ஈரான் போர் முடிவை எட்டாத நிலையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மாற்றுச் சொத்துக்களை நோக்கி நகர்ந்ததே அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பிட்காயின் விலையில் 77,000 டாலரைத் தாண்டியது. இதேபோல் தங்கம் விலை சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸுக்கு 2 சதவீதம் வரையில் அதிகரித்து 4,661 டாலர் வரை உயர்ந்தது. இதன் மூலம் பிட்காயின் கடந்த 1 வாரத்தில் 22.02 சதவீதமும், தங்கம் விலை 5.17 சதவீதம் உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது.
புதன்கிழமை அமெரிக்க கருவூலத் துறை நீண்ட கால அரசுப் பத்திரங்களை அதிக அளவில் மீண்டும் வாங்கும் திட்டத்தை அறிவித்தது, முதலீட்டு சந்தையை புரட்டிப்போட முக்கியமான காரணமாக இருந்தது.
பிட்காயின் கொடுத்த கம்பேக்
ஜனவர் மாதம் பிட்காயின் விலை சுமார் 95,000 டாலர் உச்சத்தைத் தொட்ட பிறகு, ஜூன் மாத இறுதியில் 60,000 டாலருக்குக் கீழே சரிந்தது. இது விர்ச்சுவல் கரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. சுமார் 45 நாட்கள் சைலெண்ட் மோடில் இருந்த பிட்காயின் கிரிப்டோ தொடர்பான விதிமுறைகள் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் எழுந்த காரணத்தால் சரிவை கண்டு ஓடிய முதலீட்டாளர்கள் மீண்டும் சந்தைக்குள் திரும்பி வந்தனர்.
அதே நாளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ தொடர்பான சட்டங்களை விரைவாக நிறைவேற்ற காங்கிரஸை வலியுறுத்தினார். அதேபோல் டிரம்ப் கடந்த ஆண்டு கிரிப்டோ முதலீடுகள் மூலம் சுமார் 1.2 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ள அறிவிப்பு வெளிப்பு சந்தையில் பெரும் அலையை உருவாக்கியது.
தங்கம் விலை
இதேபோல் தங்கம் விலை ஜனவரி மாதத்தில் 5,300 டாலருக்கு மேல் உயர்ந்து வரலாற்று உச்சத்தை கண்ட பிறகு, பிப்ரவரி மாதம் ஈரான் உடனான போர் தங்கம் விலையில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதங்களை பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்ததால் கட்டாயம் உயர்த்தப்படும் என தீர்க்கமாக முடிவு செய்துள்ள காரணத்தால் தங்கம் விலை கடந்த 2-3 வாரங்களாக உயர்ந்து வருகிறது. இதற்கு ஏற்றார்போல் கடந்த ஒரு வாரத்திவ் 4300 டாலரில் இருந்து 4600 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இதேபோல் தங்கம் விலை 4891 டாலர் வரையில் உயர்வதற்கான ப்ரேக்அவுட் பாதை திறந்துள்ளது.
ஆகஸ்ட் 23ஆம் தேதி சென்னை ரீடைல் சந்தை நிலவரப்படி, 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.16,309 ஆகவும், 22 கேரட் தங்கம் ரூ.14,950 ஆகவும் உள்ளது. 18 கேரட் தங்கத்தின் விலை ரூ.12,730/கிராம். ஆகஸ்ட் 15-ம் தேதி 24 கேரட் தங்கம் ரூ.15,513 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.16,309 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 22 கேரட் தங்கம் ரூ.14,220-ல் இருந்து ரூ.14,950 ஆக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்தை விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் இல்லை.
பத்திர சந்தை மற்றும் கிரிப்டோ குறித்த இரண்டு அறிவிப்புகளும் ஒரே நேரத்தில் வந்ததால் டாலர் மதிப்பு சரிந்தது. அதே வேளையில் தங்கம் மற்றும் பிட்காயின் மதிப்பு உயர்ந்தது.
