வைர வியாபாரி நீரவ் மோடி வழக்கில் திடீர் திருப்பம்: வங்கிக்கு ரூ.100 கோடி செலுத்த லண்டன் நீதிமன்றம் ஆணை
இந்திய வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்து தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் முக்கியமான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து வழக்கில் சிக்கியவர் வைர வியாபாரி நீரவ் மோடி. 2018ஆம் ஆண்டு கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் இந்தியாவில் இருந்து தப்பி லண்டனில் தஞ்சம் அடைந்தார். அவர் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு அவர் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு லண்டன் நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.

55 வயதான நீரவ் மோடி, மார்ச் 2019 முதல் லண்டன் சிறையில் உள்ளார். தன்னை இந்தியாப்வுக்கு நாடு கடத்த கூடாது என அவர் லண்டன் நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நீரவ் மோடிக்கு எதிராக பேங்க் ஆஃப் இந்தியா தொடர்ந்த வழக்கில் வங்கிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
நீரவ் மோடிக்கு சொந்தமான ‘டைமண்ட் எஃப்இஇ’ (Diamond FZE) என்ற நிறுவனம் துபாயில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்காக 2012ஆம் ஆண்டு பேங்க் ஆஃப் இந்தியா வழங்கிய கடனுக்கு, நீரவ் மோடி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று (Personal Guarantee) கையெழுத்திட்டிருந்தார். இந்தத் தொகையைத் திருப்பித் தரும்படி வங்கி கேட்டபோது, நீரவ் மோடி தரப்பில், “இந்தக் கடன் ஒப்பந்தம் சட்டப்படி செல்லாது” என்றும், “வங்கி உரிய முறையில் பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை” என கூறியுள்ளார்.
இந்நிலையில் லண்டன் நீதிமன்றத்தில் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீரவ் மோடி தரப்பு வாதங்களை நிராகரித்த லண்டன் நீதிமன்ற நீதிபதி சைமன் டிங்க்லர், பேங்க் ஆஃ ப் இந்தியா வங்கிக்கு நீரவ் மோடியிடம் பணம் வசூலிக்க உரிமையுள்ளதாக தீர்ப்பளித்தார். அசல் தொகை மற்றும் அதற்கான வட்டி சேர்த்து அவர் 100 கோடி ரூபாயை பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு நீரவ் மோடி செலுத்தியாக வேண்டும் என்றும் கூறினார். இது நீரவ் மோடிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
