Cricket
oi-Yogeshwaran Moorthi
டெல்லி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அபிஷேக் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவரது இடத்தில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அதேபோல் சிவம் துபேவுக்கும் ஓய்வு வழங்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று டெல்லி மைதானத்தில் தொடங்க உள்ளது. ஏற்கனவே முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனால் கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற ஆஃப்கானிஸ்தான் அணி போராடும் என்று பார்க்கப்படுகிறது.

முதல் 2 போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கிலேயே சொதப்பிவிட்டது. அதற்கு டாஸ் ஒரு காரணம். ஏனென்றால் 2 போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தான் டாஸ் வென்றார். அதேபோல் இந்திய அணி இந்தப் போட்டியில் சில மாற்றங்களை செய்யக் கூடும் என்று தெரிகிறது. குறிப்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கிறது.
அந்த வகையில் சீனியர் வீரர்களான அபிஷேக் சர்மா, சிவம் துபே மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அவர்களின் இடத்தில் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். ஏற்கனவே சஞ்சு சாம்சன் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணியை தொடக்க வீரர்களாக களமிறக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன.
முதல் 2 போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி பெஞ்ச் செய்யப்பட்ட சூழலில், இன்றைய ஆட்டத்தில் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதேபோல் சிவம் துபே தொடர்ச்சியாக விளையாடி வருவதால், அவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம். அவரது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கலாம் என்று தெரிகிறது.
பும்ரா பெஞ்ச் செய்யப்பட்டு, யாஷ் தாகூர் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலமாக இளம் வீரர்களுக்கும் கேம் டைம் கொடுக்க முடியும். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கவுதம் கம்பீர் கூட்டணியால் இளம் வீரர்களின் திறமையையும் புரிந்து கொள்ள வசதியாக இந்தப் போட்டி அமையும் என்று பார்க்கப்படுகிறது.

