தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.
அதன்படி தற்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளரின் மேற்பார்வை, கட்டளை அல்லது கட்டுப்பாட்டின் கீழ் வராத பிறிதொரு வெளிவாரி காவல்துறை விசாரணைப் பிரிவிடம் தனது விசாரணைப் பணிகளையும் தடுப்புக் காவல் இடத்தையும் மாற்றுவதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக உறுதியளிக்கும் வரை, தனது ‘சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை’ (Fast-unto-death) எக்காரணம் கொண்டும் கைவிடப் போவதில்லை என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சலே விதித்துள்ள நிபந்தனை
வைத்தியசாலையில் இருந்தவாறு சுரேஷ் சலே விதித்துள்ள இந்த நிபந்தனையை அவரது சட்டத்தரணி இன்றைய தினம் (08) ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சிஐடி பணிப்பாளரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சட்டத்தரணிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 15 நிமிடங்கள் என்ற வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் சலேயைச் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மனைவிக்கும் அறிவுறுத்து
இதன்போது, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு சட்டத்தரணி விடுத்த கோரிக்கைகளை சலே முற்றாக நிராகரித்துள்ளதுடன், இவ்வாறான கோரிக்கைகளைத் தன்னிடம் முன்வைக்க வேண்டாம் எனத் தனது மனைவிக்கும் அறிவிக்குமாறு சட்டத்தரணிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

