வேலைக்கு உதவாது..!! இந்திய கல்விமுறையை சாடிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு வெறும் பட்டங்களை மட்டுமே வழங்குகின்றனவே தவிர, அவர்களை வேலைவாய்ப்பிற்கோ அல்லது தொழில்முனைவோருக்கோ முழுமையாக தயார்படுத்தவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடந்தது. இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள அவர் பல்வேறு முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். தற்போதைய பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு பட்டம் வழங்குகின்றன, ஆனால் ஒரு நிறுவனத்தில் பணியாளராக சேரவோ அல்லது சொந்தமாக தொழில் தொடங்கவோ தேவையான நடைமுறை திறன்களை வழங்குவதில்லை என சாடியுள்ளார்.

வளர்ந்த நாடுகளில் உள்ள உயர்கல்வி முறைகள், மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையையும், கற்ற திறன்களை வேலைவாய்ப்பில் எப்படி பயன்படுத்துவது என்பதற்கான தெளிவான வழிகளையும் வழங்குகின்றன. இந்தியாவும் அத்தகைய நடைமுறைகளை நோக்கி மாற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், அரசாங்க வேலைகள் என்பது மொத்த வேலைவாய்ப்பில் வெறும் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே என சுட்டிக்காட்டினார். எனவே, பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரமான தனியார் துறை வேலைவாய்ப்புகள் இல்லாதது ஒரு கட்டமைப்பு சிக்கலாக உள்ளது என்றார்.
தொழில்நுட்பம் வேலை சூழலை மாற்றியமைத்து வருவதால், இன்றைய இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன துறைகளில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் நிர்மலா சீதாராமன், அரசு பள்ளிகளில் வெறும் உள்கட்டமைப்பு வசதிகளை மட்டும் மேம்படுத்தினால் போதாது கற்பித்தல் தரம் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.
நம் நாட்டில், அரசு நிறுவனங்களை விட தனியார் நிறுவனங்கள்தான் சந்தை தேவைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என கூறிய அவர், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் அமையும் என்பதால், திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவதே அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
அமைச்சரின் இந்த கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் வகையில், டீம்லீஸ் எடெக் என்ற நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 75% நிறுவனங்கள் மாணவர்களை வேலைக்கு தகுதியானவர்களாக மாற்ற தவறியுள்ளன என தெரிவித்துள்ளது.
பட்டப்படிப்பை முடித்த ஆறு மாதங்களுக்குள் 76-100% மாணவர்களுக்கு வேலை பெற்று தரும் நிறுவனங்கள் வெறும் 16.67% மட்டுமே என தெரிவித்துள்ளது. பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பாடத்திட்டத்திற்கும் தொழில்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்களை தொழில்துறைக்கு ஏற்ப மாற்றுவது, கட்டாயப் பயிற்சிகள் மற்றும் திறனை மையப்படுத்திய கல்வி ஆகியவற்றின் அவசியத்தை நிர்ம்லா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். பட்டங்களை விட திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கலாச்சாரமே எதிர்கால இளைஞர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது.

