நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய இஷ்ட தெய்வம் என்று ஏதாவது ஒரு தெய்வம் இருக்கும். குலதெய்வத்தை போலவே இஷ்ட தெய்வ வழிபாட்டையும் நாம் முழுமனதோடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல்கள் விரைவிலேயே
நிறைவேறும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு எப்படி தான் வழிபாடு செய்தாலும் யாரை வழிபாடு செய்தாலும் அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறாமலேயே இருக்கும். அப்படிப்பட்டவர்களும் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களும் வழிப்பட வேண்டிய ஒரு முக்கியமான நாளாக திகழ்வதுதான் பங்குனி உத்திரம்.
முருகப் பெருமானை இஷ்ட தெய்வமாக நினைக்காதவர்கள் கூட அன்றைய தினத்தில் வழிபாடு செய்யலாம். ஏனென்றால் அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு மட்டுமல்லாமல் சிவபெருமானுக்கும், பெருமாளுக்கும் உகந்த தினமாகவே கருதப்படுகிறது. அதனால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு பங்குனி உத்திர நாள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகவே திகழ்கிறது. அந்த நாளில் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
பங்குனி உத்திர நாள் அன்று தெய்வங்களுக்கு திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கும், பெருமாள் மற்றும் மகாலட்சுமிக்கும், முருகப்பெருமான் மற்றும் தேவயானிக்கும் திருமணம் நடந்த நாளாகவும், திருமண கோலத்தில் காட்சி அளித்த நாளாகவும் பங்குனி உத்திர நாள் திகழ்கிறது. அதனால் அன்றைய நாளில் திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் கண்டிப்பான முறையில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
மேலும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். இந்த வேண்டுதலோடு நம்முடைய மற்ற பிற வேண்டுதல்கள் அது எதுவாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒரு எளிமையான வழிபாட்டு முறை இருக்கிறது.
பங்குனி உத்திர நாள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பங்குனி மாதம் என்பது வருடத்தின் பனிரெண்டாவது மாதம், உத்திர நட்சத்திரம் என்பது நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமாக வரும். அதனால் இரண்டும் ஒரு சேர வரக்கூடிய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அந்த நாளில் சரியாக 12 மணியிலிருந்து 12 59 மணிக்குள் நாம் இந்த ஒரு வழிபாட்டை செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை நாம் நம்முடைய இஷ்ட தெய்வத்தின் படத்திற்கும் முன்பாக செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக செய்யும் பொழுது அதற்குரிய பலன் சற்று அதிகமாகவே இருக்கும்.
சரியாக மதியம் 12 மணி ஆன பிறகு கிழியாத நல்ல வெற்றிலையாக 12 வெற்றிலைகளை எடுத்து மஞ்சள் தண்ணீரில் கழுவி ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். இந்த வெற்றிலையின் நுனியில் சந்தனம் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெற்றிலையின் காம்புகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இந்த வெற்றிலைகளுக்கு மேல் அகல் விளக்கை வைக்க வேண்டும். புதிதாக வாங்கிய அகல் விளக்கை பயன்படுத்துவது என்பது மிகவும் சிறப்பு. இந்த அகல் விளக்குகளுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து ஒவ்வொரு வெற்றிலையின் மீதும் ஒவ்வொரு அகல் விளக்கு என்று 12 வெற்றிலையின் மீது 12 அகல் விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த அகல் விளக்குகளுக்கு மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இதில் சுத்தமான நெய்யை ஊற்றி தீபம் ஏற்றலாம் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றிய பிறகு அதில் வெற்றிலை காம்பை போட வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் சிவப்பு நிற மை கொண்டு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை 12 முறை எழுத வேண்டும். ஒரே ஒரு வேண்டுதலை முன்வைத்து இந்த வழிபாட்டை செய்யும் பொழுது விரைவிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறும். அதே போல் இந்த வேண்டுதலை நாம் எழுதும் பொழுது நேர்மறையான வார்த்தைகளை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. இப்படி எழுதி முடித்த பிறகு அந்த பேப்பரை மடித்து எந்த தெய்வத்தின் முன்பாக நாம் இந்த தீபத்தை ஏற்றினோமோ அந்த தெய்வத்தின் படத்திற்கு அடியில் வைத்து விட வேண்டும்.
வருடத்தின் கடைசி மாதத்தில் இந்த முறையில் நாம் தீபமேற்றி வழிபாடு செய்வதன் மூலம் பிறக்கப்போகும் புதிய வருடம் நமக்கு புது வாழ்க்கையை தரும் மேலும் நம்முடைய வேண்டுதலையும் நிறைவேற்றும்.


