Last Updated:
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் ஆண்டவரை தேர்வு செய்யும் கார்டினால்களின் கான்கிளேவ் நாளை தொடங்க உள்ளது…. போப் தேர்தலில் 4 இந்திய கார்டினால்கள் பங்கேற்க உள்ளனர்..
உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22- ஆம் தேதி போப் பிரான்சிஸ் காலமானார். இதனை தொடர்ந்து அடுத்த போப்பை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக வாடிகனில் 250 கார்டினால்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினால்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்பார்கள். அடுத்த போப்பை தேர்வு செய்யவதற்கான கான்கிளேவ் வாடிகனின் பிரபல சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெறுகிறது.
வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்லவதற்கு முன்னர், பைபிள் மீது கை வைத்து ரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள். கார்டினால்களை தவிர இரண்டு அவசர கால மருத்துவர்கள், கார்டினால்களுக்கு சமைக்கும் நபர்கள் மட்டுமே சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கார்டினால்கள் உள்பட சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்லும் அனைவரும் வெளி உலக தொடர்பை துண்டித்துகொள்ள வேண்டும்.
சிஸ்டைன் தேவாலயத்திற்கு உள்ளேயும் வெளி பகுதியிலும் தொலைபேசி மற்றும் இணைய சிக்னல்களை தவிர்க்க ஜமர்கள் பொருத்தப்பட்டிருக்கும். போப் தேர்தலில் ரகசியம் காப்பது மட்டுமன்றி, வேறு எந்த அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. கார்டினால்கள் தங்கும் மாளிகையிலும் தொலைக்காட்சி, வானொலி, செய்திதாள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கார்டினால்கன் மாளிகையிலும் சிஸ்டைன் தேவாலயத்திலும் உள்ள ஜன்னல்களை திறக்கவும் தடை விதிக்கப்படும். கான்கிளேவ்-விற்காக பணிபுரியும் அனைவரும் கடுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள், கத்தோலிக்க திருச்சபையிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கப்படுவார்கள். போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பதை மக்கள் அறிக்கை வாயிலாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ தெரிந்துக்கொள்ள முடியாது.
மாறாக சிஸ்டைன் தேவாலயத்தில் அண்மையில் பொருத்தப்பட்ட புகை போக்கியில் வெளியாகும் புகையின் நிறத்தை கொண்டு மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும். புகை போக்கியில் கறுப்பு நிற புகை வெளியானல் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் வெள்ளை நிற புகை வெளியானால் புதிய போப் கிடைத்து விட்டார் என்றும் அர்த்தம். போப் தேர்வு செய்ய கார்டினால்கள் வாக்கு செலுத்திய சீட்டுகள் உடனடியாக எரிக்கப்படும். இந்த நடைமுறை 15- ஆம் நூற்றாண்டிலிருந்து
கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிஸ்டைன் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு அடுப்பில் வாக்குச் சீட்டுக்களும் மற்றொரு அடுப்பில் புகையை வெளிப்படுத்தும் ரசாயனங்களும் எரிக்கப்படும். இதற்காக கடந்த 2- ஆம் தேதி சிஸ்டைன் தேவாலயத்தில் இரண்டு புகை போக்கிகள் பொருத்தப்பட்டன. கரும் புகை வெளியாக பொட்டாசியம் பெர்குளோரேட், ஆந்த்ராசீன் மற்றும் கந்தகத்தின் கலவை எரிக்கப்படும்.
வெள்ளை புகைக்கு பொட்டாசியம் குளோரேட், லாக்டோஸ் மற்றும் பைன் ரோசின் ஆகியவை எரிக்கப்படுகின்றன. போப் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்பதை அறிவிக்க வெள்ளை புகையுடன் சிஸ்டைன் தேவலாயத்தில், பிரமாண்ட மணி ஒலிக்கப்படும். இந்த முறை, 16-ஆம் போப் பெனடிக்ட் தேர்வு செய்யப்பட்ட போதிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய போப் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பிலிப் நேரி ஃபெராவ், பசேலியோஸ் கிளீமிஸ், அந்தோணி பூலா மற்றும் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகிய கார்டினல்கள் வாக்களிக்க உள்ளனர்..
வெளி உலக தொடர்பு கூடாது.. போன் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை… புதிய போப் தேர்வில் தொடரும் ரகசியம்


