Last Updated:
வெளிநாட்டுப் பெண்ணின் தொடையில் ஜெகநாதரின் உருவம் டாட்டூவாக இடம்பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து ஒடிசாவில் சர்ச்சை வெடித்தது.
இந்தியாவில் வசித்துவரும் வெளிநாட்டினர் ஒருவரின் தொடையில் இந்து கடவுளான ஜெகநாதரின் உருவம் பச்சை குத்தப்பட்ட விவகாரம், ஒடிசா மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாஹித் நகர் காவல் நிலையத்தில் ஜெகந்நாத பக்தர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 299 (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், அனைத்து வகுப்பினரின் மதத்தை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம்) ஆகியவற்றின் கீழ் கடை உரிமையாளர் மற்றும் டாட்டூ போட்ட கலைஞர் ஆகியோர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது.
வெளிநாட்டுப் பெண்ணின் தொடையில் ஜெகநாதரின் உருவம் டாட்டூவாக இடம்பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வெடித்த சர்ச்சையால் சம்பந்தப்பட்ட பச்சை குத்திய கலைஞர் மற்றும் கடையின் உரிமையாளர் கடந்த திங்கள்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடையின் உரிமையாளரான ராக்கி ரஞ்சன் பிசோய் மற்றும் பச்சை குத்தும் கலைஞரான அஸ்வினி குமார் பிரதான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விசாரணையின்போது, ராக்கி தனது டாட்டூ கலைஞர்களில் ஒருவரான அஸ்வினி குமார் பிரதான், அந்தப் பெண்ணின் தொடையில் பச்சை குத்தியதை ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
புவனேஸ்வரில் உள்ள ஒரு பார்லரில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பச்சை குத்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதால், இந்து அமைப்புகள் மற்றும் ஜெகந்நாத பக்தர்கள் கொந்தளித்தனர். அந்த வெளிநாட்டுப் பெண், ஒரு அரசு சாரா நிறுவனத்திற்கும், இத்தாலிய நாட்டவருக்கும் பணிபுரிகிறார் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், விவரங்களைச் சரிபார்த்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிக்க: கைதாவதை தவிர்க்க ரூ.6 கோடி மதிப்புள்ள வைர காதணிகளை விழுங்கிய திருடன்… கடைசியில் நடந்தது என்ன…?
ஜெகந்நாத பக்தர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த வெளிநாட்டுப் பெண்ணும், பார்லரின் உரிமையாளரும் சமூக ஊடகங்களில் மன்னிப்பு கேட்டனர். கூப்பிய கைகளுடன் ஒரு வீடியோவை வெளியிட்ட வெளிநாட்டுப் பெண் அதில் கூறியிருப்பதாவது, “நான் அவமரியாதை செய்ய விரும்பவில்லை, நான் ஜெகந்நாதரின் உண்மையான பக்தர், தினமும் கோயிலுக்குச் செல்கிறேன். எனினும், எனது தவறை இப்போது உணர்கிறேன். மேலும், இந்த விஷயத்தை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். நான் பச்சை குத்தும் கலைஞரிடம் ஒரு மறைவான இடத்தில் பச்சை குத்தச் சொன்னேன். மாறாக, நான் எந்த தவறான சூழலையும் உருவாக்க விரும்பவில்லை, இதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். பச்சை குத்திய பகுதி குணமானவுடன், அதை உடனடியாக அகற்றுவேன். என் தவறுக்கு என்னை மன்னியுங்கள்.” என்று கூறியுள்ளார். இதற்கிடையில், டாட்டூ போட்ட கடையின் உரிமையாளர், தாம் அந்தப் பெண்ணிடம் இந்த டாட்டூ வேண்டாம் என்று அறிவுறுத்திய போதும், அவர் அதை கேட்காமல் குத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
Odisha (Orissa)
March 06, 2025 4:31 PM IST


